ஒரே மாதத்தில் 2 ராஜாக்களை இழந்துவிட்டோம்! மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்! கமல்- ரஜினி ட்வீட்
சென்னை: ஒரே மாதத்திற்குள் 2 ராஜாக்களை இழந்துவிட்டோம் என நடிகரும் ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார். அது போல் பாக்யராஜின் மறைவுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தியதுடன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாக்யராஜ் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் பாக்யராஜ்.

அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

அது போல் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது போல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications