"எங்கள் காலம் இருக்கும் வரை லஞ்சத்திற்கு இடமில்லை".. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி
கோவை: கோவையில் நடைபெற்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், தங்களது ஆட்சியில் லஞ்சத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், பணி நியமனம் மற்றும் இடமாறுதல் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும் ஊழலற்ற சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், கல்விக் கடன் வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்காக வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், 60 ஆண்டுகாலம் கழித்து அற்புத காட்சிகளைப் பார்க்க இறைவன் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கின்றார். முடியாது, நடக்காது , சாத்தியம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் இதை சாத்தியம் என்பதை செய்து காட்டி இருக்கின்றார்.
அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் திடமான முடிவாக பட்டமளிப்பு விழாவிற்குதான் முதலில் சென்று பேச வேண்டும் என நினைத்தேன். எனது முதல் கன்னிப் பேச்சை இங்கு பதிவு செய்கின்றேன். 40 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கின்றேன். சிறந்த முதலமைச்சரின் உடல் மொழி, அறிவுக்கூர்மை முதல்வல் ஜோசப் விஜயிடம் இருக்கின்றது. மிஸ்டர் விஸ்வநாதன் என்று அடைமொழி போட்டு என்னை அழைத்த முதல்வர் விஜய், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அமைச்சரவை இது என்று கூறி இந்த துறையைக் கொடுத்தார்.
பெருமையோடு அறிவிக்கின்றோம். எங்கள் காலம் இருக்கும் வரை லஞ்சத்துக்கு ஒரு போதும் இடம் அளிக்கப் போவதில்லை. பணி நியமனம், இடமாறுதல் போன்றவற்றில் ஊழலற்ற நிலையை ஏற்படுத்துவோம். 60, 70 ஆண்டுகளாக தமிழகத்தின் நிலை தலைகீழாக போய் விட்டது. நாங்கள் லஞ்சம் வாங்க போவதில்லை, பொதுமக்களும் லஞ்சம் கொடுக்க கூடாது. அரசியல் தலைவர் எவனும் லஞ்சம் வாங்க கூடாது.
நான் படிக்கும் போது பேச்சுபோட்டி, கையெழுத்து போட்டி, விளையாட்டு என அனைத்திலும் கவனம் செலுத்தினேன். பெற்றோர்களை மதிக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தலைமை செயலாகத்தின் இரண்டாவது மாடியில் எனது அறை திறந்து இருக்கும், மாணவர்கள் எப்போதும் வரலாம். இப்போது
AI தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இங்கு இருக்கும் மாணவர்கள் கூகுளுக்கு செல்ல வேண்டும், பிரபலமானவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.
ஒரே கல்வி, ஒரே வாய்ப்பு, ஒரே சூழல் இருந்தாலும் ஒரு சிலரே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர். மாணவர்கள் கிரியேட்டர்களாக இருக்க வேண்டும்.
வரும் 29, 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற இருக்கின்றது. கல்விக் கடன் குறித்து இதில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட உள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் உருவாக்கிய கல்வி கடன் முக்கியமானது. 2004 முதல் 2014 வரை கல்விகடன் வழங்குவது சிறப்பாக இருந்தது. இந்தியாவில் அந்த 10 ஆண்டுகளில் மட்டும் 75 ஆயிரம் கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டது. கல்விக் கடன் முக்கியமானது. விரைவில் வங்கிகளை அழைத்து மாணவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றோம்
கல்லூரிகளில் பிளேஷ்மென்ட் செல் சரியாக இருக்கின்றதா என்பதைப் பார்த்து மாணவர்களை சேர்க்க வேண்டும். கல்விக் கடன் என்பது முக்கியமானது.
தமிழகத்தில் அதை வேகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் நடிகர் பாக்கியராஜ் புகைப்படத்திற்கு அமைச்சர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications