பிரதம மந்திரி முத்ரா தொழில் கடன் திட்டம்! ₹20 லட்சம் வரை கடன் பெறும் வாய்ப்பு.. அப்ளை செய்வது எப்படி
சென்னை: பிரதம மந்திரி முத்ரா யோஜனா' என்ற அரசு மானியக் கடன் திட்டத்தின் கீழ், கடன் வரம்பானது 20 லட்சம் ரூபாயாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.. எந்தவிதமான சொத்து அடமானமும் இல்லாமல், எளிய ஆவணங்களுடன் இந்த மானியக் கடனை எப்படி பெறுவது? இந்த முத்ரா யோஜனா திட்டத்தில் உள்ள வகைகள் என்னென்ன? யாரெல்லாம் அவைகளை பெறலாம்? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
சுயதொழில் ஒன்றை தொடங்கி, பொருளாதார ரீதியாக சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் ஆசை.. ஆனால் அதுக்கெல்லாம் போதிய முதலீடு இல்லையே என்று நினைத்து, அல்லது வங்கிகளுக்கு போனால் ஏதேனும் சொத்துப்பத்துகளை அடமானம் வைக்க சொல்வார்களே என்றோ பயந்தோ நிறைய பேர் தங்களது தொழில் கனவை அப்படியே தள்ளிப் போட்டு விடுவார்கள்.

ஆனால், இத்தகைய பொருளாதார சவால்களை தகர்த்து, சாதாரண மக்களும் எளிதாகத் தொழில் தொடங்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள சூப்பரான திட்டம்தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா ஆகும். எந்தவிதமான சொத்து அடமானமும் இல்லாமல், தகுதியுள்ள நபர்களுக்குப் பிணையில்லா கடனுதவி வழங்கி, அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றுவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு கடினமான தகுதிகள் எதுவும் தேவையில்லை. நீங்கள் ஒரு சின்ன கிராமத்தில் மளிகைக் கடை அல்லது தையல் கடை வைத்திருந்தாலும் சரி, அல்லது நகர்ப்புறத்தில் பியூட்டி பார்லர், செல்போன் ரிப்போர் கடை என இப்படி வைத்து நடத்தினாலும் சரி, இத்திட்டத்தின் கீழ் தாராளமாகக் கடனுதவி பெற முடியும்.
இது தவிர, புதிய ஆடைகள் வடிவமைப்பு, அப்பளம் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு போன்ற சிறு உற்பத்தித் தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கும், ஆட்டோ அல்லது லாரி போன்ற சரக்கு வாகனங்களை வாங்கிப் போக்குவரத்துத் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாழ்வாதார வாய்ப்பாக அமைந்துள்ளது.
முத்ரா திட்டத்தின் 3 பிரிவுகள்
மக்களின் தேவைகள், அவர்களின் தொழிலின் அளவுகோல் என்ன என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு,, இந்த முத்ரா திட்டமானது 3 பிரிவுகளின் கீழ் கடன்களை வழங்குகிறது.
முதலாவதாக புதியதாக ஒரு தொழிலை தொடங்கத் திட்டமிடும் தொடக்கநிலை தொழில்முனைவோருக்காக "'சிசு" என்ற பிரிவு செயல்படுகிறது. இதன் மூலம் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் வரை மிக எளிதாகக் கடனுதவி பெற முடியும். சின்ன முதலீட்டில் சுயதொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்த கடனுதவி மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். இந்த பிரிவின் கீழ் கடன் வாங்கும் பயனாளிகளுக்கு பொதுவாக எந்தவிதமான பிராசஸிங் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை.
20 லட்சம் வரை கடன் தொகை உயர்வு
அடுத்ததாக, ஏற்கனவே ஒரு தொழிலை செய்து கொண்டு, அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவோ அல்லது புது மிஷின்களை வாங்கி பிசினஸை விரிவுபடுத்தவோ நினைப்பவர்களுக்காகக் "கிஷோர்" என்ற பிரிவு உள்ளது. இந்த பிரிவின் கீழ் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
அதேபோல, தங்களது வியாபாரத்தை அல்லது உற்பத்திப் பிரிவை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்த நினைக்கும் அனுபவமிக்க தொழில்முனைவோருக்காக "தருண்" என்ற பிரிவு செயல்படுகிறது.
முத்ரா அட்டை சிறப்பு டெபிட் கார்டு
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2024-2025 பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, அதிகபட்ச கடன் வரம்பானது 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வு வளர்ந்து வரும் பல சிறு குறு நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. கிஷோர் மற்றும் தருண் ஆகிய பிரிவுகளுக்கு வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பிராசஸிங் கட்டணங்கள் மாறுபடலாம்.
இந்த திட்டத்தின் கீழ் கடன் ஒப்புதல் பெற்றவுடன் பயனாளிகளுக்கு முத்ரா அட்டை எனப்படும் ஒரு சிறப்பு டெபிட் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கும் போது, தேவைக்கேற்ப பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
அப்ளை செய்வது எப்படி? ஆவணங்கள் என்னென்ன
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் தொழிலின் தன்மையைப் பொறுத்து வணிக உரிமம், உத்யம் பதிவு, ஜிஎஸ்டி பதிவு அல்லது வங்கி கோரும் பிற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் தேவைக்கேற்ப கடந்த சில மாதங்களின் வங்கி கணக்கு விவரங்களையும் வங்கிகள் கோரலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுக்கு அருகில் உள்ள பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளை நேரடியாக அணுகலாம் அல்லது மத்திய அரசின் முக்கிய ஆன்லைன் தளமான ஜன் சமர்த் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாகவும் விண்ணப்பித்து, தங்களின் தொழில் கனவை நனவாக்கிக் கொள்ள முடியும்...!!!












Click it and Unblock the Notifications