மத்திய அரசு உடனே தலையிட்டு திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பதிவு
சென்னை: தமிழ்நாட்டில், இந்துக் கோயில்கள் தி.மு.க.வின் அடியாட்களாலும் , மேலும் பிற இந்து வெறுப்பாளர்களாலும் தாக்கப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மத்திய அரசு அரசியலமைப்பைப் பயன்படுத்தி தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பும் உள்ளது. எனவே அதற்கு பதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபக்கொப்பரை அமைத்து தீபம் ஏற்றப்பட்டு வந்தது.

இதனிடையே மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 3 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கி இருந்தார். அதில், இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் மலையின்மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று உடனடியாக போராட்டத்தில் இறங்கினார்கள். இந்து அமைப்பினர் ஏராளமானவர்கள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே திரண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினர், பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. பெரும் அளவு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மாலையில் பிறப்பித்த உத்தரவில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தேன். இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் எந்த தடையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரர் கோரிக்கை எழுப்ப அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதுமட்டுமல்லாமல் அரசு தரப்பு தகவலை ஏற்று இந்த வழக்கை மாலை 6.05 மணி வரை ஒத்தி வைத்திருந்தேன். அப்போது வரை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. கோவில் நிர்வாகத்தின் இந்த நடைமுறை ஏற்புடையது கிடையாது.
எனவே திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் உடனே திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். அவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப் கமாண்டன்ட் தலைமையிலான படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் உள்பட 67 சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி திருப்பரங்குன்றம் சென்றார்கள். ஆனால் அதற்குள் மதுரை கலெக்டர் பிரவீன்குமார், திருப்பரங்குன்றத்தி்ல் 144 தடை பிறப்பித்து இருப்பதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை காண்பித்து பக்தர்கள் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள். எக்காரணம் கொண்டும் 144 தடையை மீறி மலைக்கு யாரையும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக போலீசார் மறுத்தனர். இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் திருப்பரங்குன்றம் மலையை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தால் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு மறுத்தது நீதிமன்ற அவமதிப்பு என்று வாதிடும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். மறுபக்கம் திமுக ஆதரவாளர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பாஜக மற்றும் இந்து அமைப்பினரையும், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனையும் விமர்சித்து வருகிறார்கள்.இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க தி.மு.க. அரசு தோல்வியடைந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் என்றும், அதனால் மத்திய அரசு உடனே தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாட்டில், இந்துக் கோயில்கள் தி.மு.க.வின் அடியாட்களாலும் , மேலும் பிற இந்து வெறுப்பாளர்களாலும் தாக்கப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மத்திய அரசு அரசியலமைப்பைப் பயன்படுத்தி தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications