ஸ்டாலினின் அடுத்தடுத்த அறிவிப்புகள்.. எதிர்க்க முடியாமல் திகைத்து நிற்கும் எதிர்க்கட்சிகள்
சென்னை : அயோத்திய தாசருக்கு மணி மண்டபம், வஉசி பிறந்த நாள் தியாகத் திருநாளாக அறிவிப்பு, வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு மணி மண்டபம் மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை, என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வரும் அறிவிப்புகளால் எதிர்க்கட்சிகள் திகைத்து நிற்கின்றன.
Recommended Video
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு துறை அமைச்சர் தனது துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்கள். அத்துடன் தனது துறையில் செய்யப்பட்டு வரும் பணிகள்,ஒதுக்கப்பட்டுள்ள நிதி, செய்யப்பட உள்ள பணிகள் குறித்து விளக்கி வருகின்றனர்.
இதேநேரம் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒரு வாரமாக விதி எண் 110ன் கீழ் சிறப்பு அறிவிப்புகளை துறை வாரியாக வெளியிட்டு வருகிறார்கள். அப்படி வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பல பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மணிமண்டபம்
இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அயோத்திதாசர் அவர்களின் 175 ஆவது ஆண்டு விழாவின் நினைவாகவும், அவரது அறிவை வணங்கும் விதமாகவும் வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். இந்தஅறிவிப்பை அனைத்து கட்சிகளுமே வரவேற்றன.

தியாகத்திருநாள்
இதேபோல் செக்கிழுத்த செம்மல் வஉசி ( வ.உ.சிதம்பரனார்) பிறந்த நாள் தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும். கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' ஆண்டுதோறும் கையாக வழங்கப்படும். விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்பதுஉள்ளிட்ட 14 அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதையும் அனைத்து கட்சிகளுமே வரவேற்றன.

அரசு வேலை
இதேபோல் 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான சமூகநீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும், அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பினை பாட்டாளி மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளன.

இலங்கை தமிழர்
மேலும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், முன்னதாக இலங்கை அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் என்று மாற்றி அறிவித்து உத்தரவிட்டார். இந்த அறிவிப்புகளும் வரவேற்பை பெற்றது.

எதிர்க்கட்சிகள்
அடுத்தடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வரும் அறிவிப்புகளால் அதை வரவேற்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள், எப்படி எதிர்ப்பது என்று திகைத்து போய்நிற்கின்றன. இதனிடையே சட்டசபையில் தன்னை புகழ்பாடக்கூடாது என்று எச்சரித்து ஆளும் கட்சி உறுப்பினர்களை அதிர வைத்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications