அன்று காங்கிரசுக்கு எதிராக முழக்கம்... இன்று காங்கிரசில் முக்கியப் பதவி... சர்ச்சையில் சுதா..!
சென்னை: இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்ற போது எந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினாரோ அதே காங்கிரஸ் கட்சியில் மாநில பொறுப்பு பெற்று இன்று பதவியேற்கிறார் சுதா ராமகிருஷ்ணன்.
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக சுதா ராமகிருஷ்ணன் இன்று பதவியேற்கும் நிலையில் அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து வந்திருக்கிறார் சவுமியா ரெட்டி.
இதனிடையே சவுமியா ரெட்டியை சந்தித்து சுதா ராமகிருஷ்ணன் நியமனம் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் முயற்சியில் உள்ளனர் காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் பலர்.
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி
கோஷ்டிப்பூசல்
நகமும் சதையும் போன்று, கண்ணும் இமையும் போன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியையும் கோஷ்டிப்பூசலையும் பிரிக்கவே முடியாது போல் தெரிகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொண்டர்களுக்கு பஞ்சமிருக்கிறதோ இல்லையோ தலைவர்களுக்கு பஞ்சமில்லை. அந்தவகையில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக சுதா ராமகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்கான நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
சுதா ராமகிருஷ்ணன்
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக அண்மையில் சுதா ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்ட விவகாரம் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுதா ராமகிருஷ்ணன் என்றும் சோனியாவின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் எனவும் அவர் மீது டெல்லிக்கு புகார்கள் பறந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் சுதா.
நேரடியாக டெல்லி
சுதா ராமகிருஷ்ணனின் கடந்த கால அரசியல் நிலைப்பாடு மற்றும் பின்னணி குறித்து தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் சவுமியா ரெட்டிக்கு பலமுறை புகார் அனுப்பியும் அதற்கு ரியாக்ஷன் இல்லாததால், இப்போது நேரடியாக டெல்லிக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. இதனிடையே சுதா ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு சில நாட்களே ஆகியிருப்பதால் வேறுவழியின்றி புகார்களை கண்டும் காணாமலும் இருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேனுகோபால்.
பலரும் ஏமாற்றம்
சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி தம்மிடம் இருக்கும் என எதிர்பார்த்த ஜான்ஸி ராணிக்கு இந்த மாற்றம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல் விஜயதரணி, ஹசீனா சையத், இமயா கக்கன், உள்ளிட்ட பலரும் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.