சென்னை ஹைகோர்ட் புதிய நீதிபதிகளாக சுதீர் குமார், விவேக் குமார் சிங் நாளை பதவியேற்பு.. யார் இவர்கள்?
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்கின்றனர். தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை இயங்கி வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா இருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 என்ற அளவில் உள்ளது. 11 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் தான் அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம் சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக விவேக் குமார் சிங், எம் சுதீர் குமார் ஆகியோர் பதவியேற்க உள்ளனர். இவர்கள் இருவருக்கும் நாளை மாலை 4.45 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆக குறைகிறது.
நாளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கும் விவேக் குமார் சிங் உத்தர பிரதேசத்தில் பிறந்தவர். உத்தர பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 1968ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி அவர் பிறந்தார். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதேபோல் மற்றொரு நீதிபதியான சுதீர் குமார் தெலங்கானாவை சேர்ந்தவர். இவர் கடந்த 1969ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிறந்தார். 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications