ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே "மர்ம சூட்கேஸ்" எச்சரிக்கை ஒலியால் பதற்றம்! காரில் இருந்து வீசியது யார்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பாக மர்ம நபர்கள் சூட்கேசை வீசி சென்றுள்ளனர். சி.ஆர்.பி.எப் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்க வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி உயிர் நீத்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இந்த நினைவிடம் உள்ளது. நினைவிடம் முன்பாக செல்லும் சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இந்த பகுதியில் இன்று மர்ம நபர்கள் சூட்கேசை வீசிச் சென்றுள்ளனர். நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் காரை நினைவிடம் முன்பாக நிறுத்தி விட்டு, சூட்கேசை எடுத்து வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார், மர்ம நபர்கள் வீசிச்சென்ற சூட்கேசை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். இதில், எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அச்சம் அடைந்த பாதுகாப்பு படையினர், ஸ்ரீபெரும்பதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு சூட்கேசை யாரும் நெருங்கிவிடாத படி பேரிகார்டு வைத்து மறித்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் அந்த சூட்கேசில் என்ன உள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நினைவிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சூட்கேசை வீசிய மர்ம நபர்கள் குறித்தும் அவர்கள் வந்த காரின் பதிவெண்ணை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications