தமிழகத்தில் புதிதாக 5 பதிவு மாவட்டங்கள்.. திமுக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
5 புதிய பதிவு மாவட்டங்களை உருவாக்க நிதி அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் புதிதாக 5 பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக நிதியை விடுவிக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இப்படி மாவட்டங்களை பிரிப்பதற்கு பிறகு நிறைய அரசியல் காரணங்களும் உள்ளன.. குறிப்பாக தேர்தல் சமயத்தில், இப்படி மாவட்டங்களை பிரிப்பது பெருமளவு ஆளும் கட்சிக்கு கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
தற்போதும் 5 மாவட்டங்கள் பிரிப்பது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பத்திரப் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

கண்காணிப்பு
இவைகளை கண்காணிப்பதற்காகவே, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.அதேபோல, பத்திரங்களின் வரத்து, மக்கள் தொகை அடிப்படையில் சில வருவாய் மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு மாவட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் அடிக்கடி மிகப்பெரிய மாவட்டங்கள் இரண்டாக அல்லது 3ஆக பிரிக்கப்படுவது வழக்கம்.. நிர்வாக வசதி மற்றும் மாவட்ட மக்களின் நன்மை கருதி மாவட்டங்களை பிரிப்பது நடந்து வருகிறது.

5 புதிய பதிவு மாவட்டங்கள்
இதனிடையே, கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் பல்வேறு பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு, புதிய வருவாய் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன... எனினும் சில வருவாய் மாவட்டங்களில் பதிவு மாவட்டங்கள் இல்லாத சூழல் காணப்படுகிறது.. இதன் காரணமாக திருவள்ளூர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவாரூர், பெரம்பலுார் உள்ளிட்ட 5 புதிய பதிவு மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று கடந்த வருடம் திமுக அரசு அறிவித்திருந்தது.

முதல்வர்
முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதுமே, இவை கவனத்தில் கொள்ளப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.. அத்துடன், இந்த பதிவு மாவட்டங்கள் ஏற்படுத்த நிர்வாக பணிகளுக்காக ரூ. 2.35 கோடி ஒதுக்கவும் தமிழக அரசு அப்போது முடிவு செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக இப்போது பெரம்பலுார் பதிவு மாவட்டம் உருவாக்க அரசாணையை வெளியிட்டுள்ளது..

4 மாவட்டங்கள்
அதன்படி புதிய பணியிடங்கள், நிர்வாக எல்லை வகுப்பது, அலுவலகம் அமைப்பதற்கான நிதியை விடுவிக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மற்ற 4 பதிவு மாவட்டங்கள் அமைப்பதற்கான அரசாணையும் படிப்படியாக பிறப்பிக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்... தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், இனி பத்திரப்பதிவுகள் தாமதமின்றி உடனுக்குடன் நடைபெறும் என்றும் கூடுதலாக நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications