உலக தரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை கொண்டு வரலாம்.. சூப்பர் ஐடியா கொடுத்த சுப்ரியா சாகு!
சென்னை: உலக தரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை கொண்டு வர சூப்பரான ஐடியா கொடுத்த தமிழக சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளரும் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான (பொறுப்பு) சுப்ரியா சாஹூ.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.
இதில் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் உள்ளிட்ட கணக்கில் வராதவை கைப்பற்றப்பட்டன. மேலும் இவர் வனத்துறை அதிகாரியாக இருந்த போது சந்தனமரங்களை பதுக்கி வைத்து அந்த மரத்தால் சில கலை பொருட்களையும் செய்து வைத்திருந்தார்.

விடுவிப்பு
இதையடுத்து அவர் விசாரணை வளையத்தில் இருப்பதால் அவர் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளராகவும் உள்ளார்.

டிவிட்டரில் ஆக்டிவ்
இவர் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். வனவிலங்குகள் குறித்தும் அதன் வாழ்வியல் , சூழலியல் குறித்தும் அவ்வப்போது வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிடுவார். அது போல் வாயில்லா ஜீவராசிகளிடம் அன்பு செலுத்துவது குறித்தும் அறிவுறுத்துவார். அது போல் தமிழகத்தில் ஏதோ ஒரு ஊரில் வீட்டிற்கு வந்த நாகப்பாம்பு குட்டியை பெண் ஒருவர் தங்கமே, போடீ செல்லம் என கொஞ்சி வழியனுப்பி வைத்த சம்பவத்தை வைரலாக்கினார்.

நீலகிரி மாவட்டம்
இவர் ஏற்கெனவே இன்கோசர்வ் தலைமை செயல் இயக்குநராகவும் நீலகிரி மாவட்டத்தில் பதவி வகித்திருந்தார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் இவர் பணியாற்றினார். சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழித்தார். பிளாஸ்டிக்கால் வனத்திற்கும் நிலத்தடிக்கும் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தார்.

சென்னை மாநகராட்சி
இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய இணைந்து கோயம்பேட்டில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று நடத்தியது. அதில் பிளாஸ்ட்டிக்கை அறவே ஒழிப்போம் எனும் கருப்பொருளை மையமாக வைத்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளரும் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மிகப் பெரிய மார்க்கெட்
இந்த நிகழ்ச்சியில் சுப்ரியா சாகு பேசுகையில், இந்தியாவில் மிகப் பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு விளங்குகிறது. ஆசியாவிலேயே உலகிலேயே பிளாஸ்டிக் இல்லாத மார்க்கெட்டாக கோயம்பேட்டை ஏன் மாற்றக் கூடாது? இதற்காக முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையின் பேரில் உங்கள் அனைவருக்கும் உறுதுணையாக அரசு இருக்கும் என கூறினார். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் கடைக்காரர்களுக்கு சணலாலான பைகளை கொடுத்தார்.












Click it and Unblock the Notifications