ஆயிரம் சொல்லுங்க.. சுஷ்மா சுஷ்மாதான்.. அந்த துணிச்சல், தைரியம், தெளிவு.. மறக்க முடியாதவர்!
துணிச்சலுடன் தனது பதவியை அலங்கரித்தவர் சுஷ்மா சுவராஜ்
Recommended Video
சென்னை: ஆயிரம் சொல்லுங்க... சுஷ்மா சுஷ்மாதான்! அவரது துணிச்சல் எப்பவுமே ஒரு ஸ்பெஷல்தான்!
துணிச்சல் என்ற வார்த்தை சொன்னாலே அதில் ஒருசில பெண்களே நம் கண்முன்னால் வந்து நின்றுவிடுவார்கள். இந்திரா காந்தி, ஜெயலலிதா இவர்களை நாம் நினைக்கும்போது அடுத்ததாக மனதில் எழுபவர் சுஷ்மா சுவராஜ்தான்!
இவரது துணிச்சல் என்பது ஓடுகிற பாம்பை காலில் மிதிப்பதோ அல்லது கரண்ட் கம்பியை கையில் பிடிப்பதோ அல்ல. ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னால் இந்த துணிச்சல் தந்த செயல்பாடுகள் ஏராளம். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.
பெண் செய்தி தொடர்பாளர்
ஹரியானா அரசின் குறைந்த வயது அமைச்சராக ஆனார். அதாவது அப்போது அவருக்கு வயசு வெறும் 25தான். டெல்லியின் முதல் பெண் முதல்வர் ஆனார். கட்சியின் முதல் செய்தி தொடர்பாளர் ஆனார். பாஜகவுக்கு மட்டுமில்லை... வேறு எந்த கட்சிக்குமே அதுவரை பெண் செய்தி தொடர்பாளர் கிடையாது. சுஸ்மாதான் முதல் ஆள்.
சிறப்பாக கையாண்டார்
இவர் வெளியுறவு துறை அமைச்சரான நேரமோ என்னவோ, பாகிஸ்தான் ஒரு பக்கமும் சீனா மற்றொரு பக்கம், இலங்கை இன்னொரு பக்கமும் சவால் நிறைந்த அம்புகளை சுஷ்மா மீது தொடுத்து கொண்டே இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து இத்தனை நாட்டின் பிரச்சனைகளை கையாண்டு, இந்தியாவை படுகுழியில் தள்ளாமலும், மோசமான வன்முறை துண்டாடலுக்கு இட்டு செல்லாமலும் சுஷ்மா மிக சிறப்பாகவே கையாண்டார்.
பிரதமர் வேட்பாளர்
இத்தகைய பக்குவமும், அணுகுமுறையும், சவாலை எதிர்கொள்ளும் துணிவும் சுஷ்மாவுக்கு எங்கிருந்து கிடைத்தது தெரியுமா? சாட்சாத் வாஜ்பாயின் பட்டறையில்தான்! தன்னுடைய ஆட்சியின்போது பல முக்கியமான பொறுப்புகளை சுஷ்மாவுக்கு தந்தவர் வாஜ்பாய். அதனால்தான் 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டவர்களில் சுஷ்மாவும் ஒருவராக இருந்தார்.
உடனடி தீர்வு
முன்பெல்லாம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கும். தூதரகத்தை அணுகி சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்குள் காலதாமதமும் ஆகும். ஆனால் எப்போது சுஷ்மா வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்றாரோ, அப்போதிலிருந்தே இப்படிப்பட்ட தொய்வு குறைந்துவிட்டது.
ட்விட்டர் அரசியல்
வெளிநாட்டு இந்தியர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அதை தீர்க்க உடனடி நடவடிக்கையை சுஷ்மா மேற்கொண்டார். அதற்கு காரணம், சுஷ்மா ட்விட்டரை கையிலெடுத்ததுதான். எப்போதுமே சுஷ்மா ட்விட்டர் அரசியல் செய்கிறார் என்றுகூட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். ஆனாலும் தற்போதைய துரித காலகட்டத்தில் இத்தகைய சமூக வலைதளங்களை மிக நேர்த்தியாக கையாண்டு பிரச்சனையை எளிதாக முடித்தார் சுஷ்மா.
உடல்நலக்குறைவு
நிறைய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எந்த நாட்டுக்கு பயணம் செய்கிறாரோ, அந்த நாட்டுடன் உறவையும் புரிதலையும் மிக அழகாகவே ஏற்படுத்திவிட்டுதான் தாய்நாடு திரும்புவார். கொஞ்ச நாளைக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது கூட சுஷ்மா சும்மாவே இல்லை. நாட்டின் பாதுகாப்பு குறித்த முயற்சிகளை முடிந்தவரை கையாண்டுதான் வந்தார்.
மனதில் நிற்பார்
என்ன காரணமோ தெரியவில்லை, 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்று சுஷ்மா அறிவித்துள்ளார். அதற்கு அவரது உடல்நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் சுஷ்மா இதுநாள் வரை நாட்டிற்கு செய்த பாதுகாப்பு, சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் எல்லாமே காலத்துக்கும் நமக்கு பளிச்சிட்டுதான் இருக்கும்! அத்துடன், வெளியுறவுத்துறை என்று சொன்னாலே அதில் சுஷ்மா பெயரும் நம் நினைவில் எப்பவுமே கூடவே வரும்.