"அரசியல் அனாதை!" அண்ணாமலைக்கு விவரம் பத்தல! அதிமுகவுக்கு சப்போர்ட்டாக வந்த எஸ்வி.சேகர்! கடும் தாக்கு
சென்னை: அதிமுக குறித்து அண்ணாமலை கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருந்தார். இதற்கிடையே பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அதிமுக- பாஜக கூட்டணி இடையே இப்போது மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் எனக் கூறியிருந்தார்.

மேலும், ஜெயலலிதா குறித்தும் சில கருத்துகளைக் கூறியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கடும் தாக்கு: அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் இதே போக்கு தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் இது குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அண்ணாமலை குறித்து எஸ்வி சேகர் ஏற்கனவே பல விமர்சனங்களை வைத்துள்ளனர்.
அண்ணாமலையின் தற்போதைய பேச்சு குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு எஸ்வி சேகர் அளித்த பேட்டியில், "அதிமுகவுடன் கூட்டணி இருக்கக் கூடாது என அண்ணாமலை முடிவு செய்துவிட்டார். கட்சி அவருடன் கூட்டணி வைக்க விரும்பினாலும் அதை முறியடிக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். கட்சி வெல்ல வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. தான் மட்டும் வெல்ல வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

இருப்பை காட்டப் பேசுகிறார்: மிகவும் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அண்ணாமலை. தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா. இங்கே அண்ணாமலையால் எதுவும் செய்ய முடியாது. தன்னுடைய இருப்பை பிரம்மாண்டமாகக் காட்டிக் கொள்ளப் பேசும் பேச்சு தான் இது.. இப்போது இவர் ஏதேதோ சொல்கிறார். இதெல்லாம் முந்தைய தேர்தல்களில் அதிமுகவுடன் எடப்பாடியுடன் கூட்டணி வைக்கும் போது தெரியாதா..
அரசியலில் எப்போதும் இரண்டு விதம் தான்- ஒன்று ஊழல் செய்து மாட்டிக் கொள்பவர்கள். இரண்டு ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாதவர்கள்.. அண்ணாமலை இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை அவ்வளவுதான். கூட்டணி தர்மம் என ஒன்று இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் போதே நமீதாவையும் ராதா ரவியையும் அங்கிருந்து இழுத்தார்கள். இங்கிருந்து சிலர் அங்குச் சென்றதும் அப்போது கூட்டணி தர்மம் எனப் பேசுகிறார்கள்.
தலைமைப் பண்பில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை.. அண்ணாமலையால் தமிழகத்தில் பாஜகவுக்குச் சரிவு ஏற்படும் என டெல்லி தலைமை கருதினால் அவரை உடனடியாக மாற்றிவிடுவார்கள். அண்ணாமலையை வைத்து ஒன்றும் பாஜக இல்லை. 3ஆவது முறையாக வென்று, 300+ இடங்களில் கைப்பற்றி மோடி மீண்டும் பிரதமர் ஆவார் எனச் சொல்லி வருகிறோம். இதில் ஒரு சீட்டையாவது பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அண்ணாமலை கட்சி சார்ந்த நடவடிக்கையைப் பார்ப்பார்.
அரசியல் அநாதை: அதைவிட்டுவிட்டு மற்றவர்களை விமர்சித்து பெரியாள் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். அண்ணாமலைக்கு இன்னும் விவரம் பத்தவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுப்பது டெல்லி தலைமை. அதில் முடிவெடுக்கும் அதிகாரம் அண்ணாமலைக்கே இல்லை. நான் இப்போது அண்ணாமலைக்கு எதிராகப் பேசுவது.. பாஜகவுக்கே எதிராகப் பேசுவது போல நினைப்பது முட்டாள்தனம். ஏனென்றால் கட்சிக்கு எது நல்லது என்பதையே கருத்தில் கொள்ளாமல் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
நாளை ஒரு கட்டாயத்தில் கூட்டணி உருவானாலும் கூட அதிமுக தொண்டர் யாரும் வேலை செய்ய வர மாட்டார்கள். நமது வெற்றிக்கு அவர்களின் வாக்கு முக்கியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என நினைப்பவரே நல்ல அரசியல் தலைவர்.. யாரும் வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டு இருந்தால் அரசியல் அனாதையாகவே நிற்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications