SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர்
சென்னை: தூத்துக்குடி விளாத்திக்குளம் பெண் ஏன் புதர் பின்னாடி போக வேண்டும்.. போலீஸ் அங்கையும் லைட் வைக்க வேண்டுமா என சர்ச்சைக்குரிய வகையில் எஸ்வி சேகர் பேசியிந்த நிலையில் தற்போது அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். யாரையும் குறிப்பாக இறந்து போனவர்கள் பற்றி தவறாக பேசுவது தவறு என நினைப்பவன் நான். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகரும் திமுக பிரமுகருமான எஸ்.வி சேகர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தாய் தந்தை தான் பார்க்க வேண்டும்
எஸ்.வி சேகர் கூறுகையில், எங்கள் வீட்டில் பீரோவை நான் பூட்டாமல் போய்விட்டேன். திருடன் வந்து பொருளை எடுத்துவிட்டு சென்றுவிட்டான். இதற்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நான் சொல்ல முடியுமா?.. ஒவ்வொரு பெண் குழந்தைகளின் தாய் - தந்தையர்கள் அவர்களின் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பாத்ரூம் போவது என்றால் கூட துணைக்கு ஒருவர் போக வேண்டும்.
ஏனென்றால், நமக்கு சுதந்திரம் என்பது வேறு.. பாதுகாப்பு என்பது வேறு.. நாம முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஜனத்தொகை எத்தனை? பத்து கோடி பேர்.. நீங்க சொல்கிற இந்த மாதிரி பாலியல் குற்றச்சாட்டு மூன்று நடந்து இருக்குமா? நாலு நடந்து இருக்குமா? யோசிச்சி பாருங்க.. பாலியல் குற்றவாளிகளுக்கு கண்டவுடன் சுட வேண்டும் என்பது போல தண்டனை உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
புதர் பின்னாடி மறைந்து
போலீஸ் நடவடிக்கை எடுத்தால் மனித உரிமை ஆர்வலர்கள் உடனே ஓடி வந்து விடுகிறார்கள். அவர்களை நீங்கள் பிரியாணி கொடுத்து அல்லவா ஜெயலில் வைத்து இருக்க வேண்டும். எப்படி சுடலாம் என்று வந்து விடுகிறார்கள். உங்கள் வீட்டில் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அந்த நபரை உடனே சுட வேண்டும் என்று தோன்றும் அல்லவா.. அதேதான்.. லாக் அப் டெத் அதேதான்.
சில போலீஸ்காரர்கள் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களை என்ன செய்கிறார்கள் சஸ்பெண்ட் செய்கிறார்கள். சஸ்பெண்ட் செய்யக்கூடாது அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேன்டும். குற்றமற்றவர் என்று நிரூபித்த பிறகு பணியில் சேர்க்க வேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும். அந்த பெண் ஒரு புதர் பின்னாடி மறைந்து நின்று கொண்டிருந்தது. அப்போது, அவர் வந்துவிட்டார்.. ஏன் புதர் பின்னாடி போகனும்.
மன்னிப்பு கேட்ட எஸ்வி சேகர்
யோசிச்சு பாருங்க.. உடனே போலீஸ் எல்லாவற்றிற்கும் லைட் போட வேண்டும். போலீஸ் தெருவுக்கு லைட் போடுவாங்களா.. புதருக்கு லைட் போடுவாங்களா" என்று பேசினார். எஸ்வி சேகரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கருத்துக்கு எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:-
யாரையும் குறிப்பாக இறந்து போனவர்கள் பற்றி தவறாக பேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொன்னது புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக அறிகிறேன். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications