ரேஷன் கடைகளுக்கு மேஜர் உத்தரவு.. "யாருக்கும் இல்லாமல் போக கூடாது".. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்
வரும் 13ம் தேதி ரேஷன்கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
சென்னை : பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. இதையடுத்து ரேஷன்தாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் கடைகள்
மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகளில் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப உத்தரவுகளும், மாற்றங்களும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இன்ஸ்பெக்ஷன்
குறிப்பாக, நியாய விலை கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும், தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும், கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் கூட்டுறவுத்துறை அடிக்கடி உத்தரவிட்டும் கண்காணித்தும் வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், பொங்கல் தொகுப்பு இந்த வருடமும் நமக்கு கிடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வெல்லம்
ஒவ்வொரு வருடமும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த வருடம் கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

பச்சரிசி
இதற்காகவே, பொங்கல் பரிசினை வழங்குவதற்காகவே, ஜனவரி 13-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணிநாளாக அறிவித்துள்ளனர். குடும்ப அட்டைக்கு டோக்கன் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படயுள்ளது. நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவை அனைத்தும் மக்களுக்கு எளிதாக கிடைக்க பொங்கலுக்கு முந்தைய நாள் நியாய விலை கடைகள் திறந்து இருக்கும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

கியூவில் மக்கள்
பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.1000 ரொக்கம், முழு கரும்பு வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கியமாக, ஒருத்தருக்குமே, பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ம் தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications