பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஸ்விகி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!
சென்னை: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வுக்கு ஏற்றாற்போல ஊதியத்தை உயர்த்த கோரியும் நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்களை போன்ற கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றனர்.
இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும். வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் சர்வீசஸ் தொழிலாளர்கள் சங்கம் (GIPSWU) வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நீண்ட நேரம் வேலை செய்தும் கூட, போதிய வருமானம் இல்லை என்று கிக் தொழிலாளர்கள் கூறுகின்றனர். சமூக வலைத்தளமான X தளத்தில் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பதிவில்,
“அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் போதுமான ஊதியம் இல்லாததை கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள கிக் மற்றும் பிளாட்பார்ட் தொழிலாளர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை ஆப் சார்ந்த சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு சுமார் ₹3 எரிபொருள் விலையை உயர்த்தியதன் பின்னணியில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், டீசல் லிட்டர் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டாக்ஸி டிரைவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஓட்டுநர்கள், எரிபொருள் செலவு தங்கள் வருவாயின் பெரும் பங்கை எடுத்துக்கொள்வதாகவும், ஆப் நிறுவனங்கள் அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications