முதல்வரின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு.. உதயசந்திரனுக்கு என்னென்ன துறைகள்?
சென்னை: முதல்வரின் தனிச்செயலாளர்களான உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோருக்கு கூடுதலாக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனு ஜார்ஜ் ஐஏஎஸ் விடுப்பில் சென்றதாக தெரிகிறது.
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் முதலில் அரசு இயந்திரத்தில் மாற்றத்தை கொண்டு வந்தார். அந்த வகையில் முதல்வரின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் ஆவர்.
இவர்கள் 4 பேருக்கும் தனித்தனியே துறைகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதலாக மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சுற்றுலா, சுற்றுச்சூழல் ஆகியவை ஆகும்.

உமாநாத்
இதையடுத்து உமாநாத் ஐஏஎஸ்க்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முதல்வரின் சந்திப்புகள்
முதல்வரின் சந்திப்புகள், கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், சமூக சீர்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை சண்முகம் ஐஏஎஸ் கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. 4ஆவது தனிச்செயலாளராக உள்ள அனு ஜார்ஜ் சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்லவிருக்கிறார் என தெரிகிறது.

12 துறைகள்
இதனால் அவர் வசமுள்ள 12 துறைகளை பிரித்து பிற தனிச் செயலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை மற்ற 3 பேருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 தனிச்செயலாளர்களில் உதயசந்திரன் முதன்மை தனிச் செயலாளராக உள்ளார். உதயசந்திரன் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது நீண்ட காலமாக பிரச்சினையில் இருந்து வந்த 3 கிராமங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக நிகழ்த்தி காட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றவர்.

டிஎன்பிஎஸ்சி
அதன் பின்னர் பல்வேறு துறைகளின் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றார். டிஎன்பிஎஸ்சியின் செயலாளராக இருந்த போதுதான் இணைய வழியில் விண்ணப்பங்களை பெறுதல், ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட புதுமைகளை புகுத்தினார். அது போல் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக இருந்த போது சமச்சீர் கல்வி திட்டத்தின் பாடப்புத்தகத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.

பள்ளிக் கல்வித் துறை
பின்னர் பள்ளி கல்வித் துறையில் தர மதிப்பீட்டு முறையை மாற்றி அமைத்தார், பிளஸ் 1 படிப்பும் பொதுத் தேர்வாக கொண்டு வந்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு துறை இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை ஆணையர், தமிழ்நாடு மின்னணு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். இதனால் இவர் முதல்வர் ஸ்டாலினின் குட் வில் புக்கிலும் இடம்பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications