பிரஸ் மீட்டின் போது சீமான் காலில் விழுந்த டேபிள்.. கால் சிக்கியதால் பரபரப்பு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சீமான் கால் மீது டேபிள் விழுந்தது. இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டேபிள் காலில் விழுந்த உடன் பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு சீமான் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, கடந்த மாதம் கோலடி -அன்பு நகர், செந்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த வீடுகள் மற்றும் ஆள் இல்லாமல் இருந்த வீடுகள் அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் போரட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, வீடுகள் இடிக்கப்படுவதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சங்கர்(44) என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தச்சு தொழிலாளியான சங்கர் தற்கொலைக்கு நியாயம் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே, உயிரிழந்த சங்கரின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சீமானிடம் பேட்டி அளிக்க வசதியாக அவருக்கு முன்னால் இரும்பு மேஜை(டேபிள்) ஒன்று போடப்பட்டு அதில், ஊடகங்களின் மைக்குகள் வைக்கப்பட்டு இருந்தன. சீமான் ஆவேசமாக அந்த மேஜை முன்பாக நின்று பேட்டி அளித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மேஜை சரிந்து விழுந்தது.
சீமானின் காலில் மேஜை விழுந்தது. இதில் சீமான் கால் சிக்கிக் கொண்டது. உடனடியாக சுற்றி நின்றவர்கள் மேஜையை அப்புறப்படுத்தினர். டேபிள் விழுந்ததில் வலி ஏற்பட்ட போதும் சீமான் அதை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. சீமான் அணிந்து இருந்த கால் ஷூவில் டேபிள் விழுந்த தடம் அப்படியே பதிவாகியிருந்தது. சீமான் பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது மேஜை காலில் விழுந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:- இது ஒரு ஏரி என்று சொல்லி இடிக்க வரும் ஆட்சியாளர்கள்தான் பரந்தூரில் 12 ஏரிகளை தூர்த்து விட்டு ஏர்போர்ட் கட்டத் துடிக்கிறார்கள். வள்ளுவர் கோட்டமே ஏரியை தூர்த்துக் கட்டப்பட்டதுதான். இப்போது நான் ஒரு வழக்கு போடுகிறேன்... வள்ளுவர் கோட்டம் இருக்கும் பகுதிக்கு பேர் 'லேக் ஏரியா' அதை தூர்த்துவிட்டு கட்டிடம் கட்டி இருக்கிறார்கள்.

இடியுங்கள் என வழக்கு போட்டால் நீதிமன்றம் என்ன செய்யும்.. இடிங்க என சொல்லுமா? சொல்லாது ஏனென்றல் அங்கே பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் வாழ்கிறார்கள். இங்கு அடித்தட்டு மக்கள், உழைக்கும் மக்கள், தினம் வீட்டு வேலைக்கு சென்று வாழும் மக்கள் வாழ்கிறார்கள். அதிகாரம் இல்லை. குரல் எழுப்ப யாரும் இல்லை.. ஆனாலும் உங்களுடன் பிறந்தவன் நான் இருக்கிறேன் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
இரவோடு இரவாக இடிக்க வந்தாலும் இரவோடு இரவாக வண்டியை எடுத்துக் கொண்டு வருவேன். நான் வர தாமதம் ஆனாலும் என் கட்சியினர் உடனே வந்து நிற்பார்கள். நம்மை மீறிதான் அவர்கள் வீட்டை இடிக்கனும்.. தொடனும்.. நோட்டீஸ் ஒட்டியது ஒட்டியதாகத்தான் இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் தைரியமாக மட்டும் இருங்கள். அழுவதால் எதையும் சாதிக்க முடியாது.
ஒருத்தர் உயிரை விட்டிருக்கிறார். அதனால் என்ன பயன்? அந்த குடும்பமும் நாமும் நடுத்தெருவில் அழுவதை தவிர எதுவும் சாதிக்க முடியாது. ஏனென்றால் உயிருக்கும் மதிப்பளிக்காத ஆட்சியாளர்கள் இவர்கள். உயிருக்கு மதிப்பே கொடுக்க மாட்டார்கள். நாம் ஒன்றிணைந்து போராடுவோம். எதற்கும் கவலைப்படாதீர்கள். நாங்கள் பல லட்சம் பேர் உங்கள் பின்னால் நிற்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications