கிளாம்பாக்கம் வரட்டுமே.. தாம்பரம் டூ ஸ்ரீபெரும்புதூர் ரூட்டும் ரெடி.. துள்ளி குதிக்கும் "முடிச்சூர்"
சென்னை: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில், 393 கோடி செலவில் சிஎம்டிஏ-வால் கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் தயாராகி உள்ளது..
பிரமாண்டமான முறையில் இந்த கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.. "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

திறப்பு விழா: எப்படியும் ஜூலை மாதத்துக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது.. இதனிடையே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டவுடன் ஏற்படக்கூடிய செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
கூட்டம்: ஆனாலும், சென்னையில் பெய்த மழையால், கிளாம்பாக்கம் புது பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது.. இது தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, மீண்டும் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்..
முக்கியமாக, இந்த பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் அதாவது, ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் ஜிஎஸ்டி சாலையில், நெருக்கடிகள் ஏற்படாதவாறு பல மாற்றங்களை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது..

ஐடி கம்பெனிகள்: இதையடுத்து, தாம்பரம் - முடிச்சூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையை விரிவாக்கும் பணிகள் துரிதமாகி வருகின்றன.. ஸ்ரீபெரும்புதூரில் நிறைய ஐடி கம்பெனிகளும், தொழிற்நிறுவனங்களும் பெருகிவிட்டதால், டிராபிக்கும் அதிகமாகி வருகிறது. அதனால்தான், ரூ.95 கோடி செலவில் தாம்பரம் - முடிச்சூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையை 2 வழிச்சாலையில் இருந்து, 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் கையில் எடுக்கப்பட்டன. அவைகள் இப்போது 60 சதவீதம் முடிந்துவிட்டதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படாதவாறு, இரவு நேரங்களில் மட்டும், அதுவும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே இந்த பணிகுள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
பெருத்த நம்பிக்கை: மொத்தம் 28 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் 13 கி.மீ. தூரத்திற்கு 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.. மிச்சமிருக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.. இந்த சாலை திறக்கப்பட்டுவிட்டால், ஜிஎஸ்டி சாலையிலும் சென்னை - பெங்களூர் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறைந்துவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications