2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே.. கடல் கடந்து தடம் பதித்த தமிழன்.. எகிப்தில் வெளியான முக்கிய ஆதாரம்
சென்னை: எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு மற்றொரு சாட்சியாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி. இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்குடிகள் தடம் பதித்ததை பல ஆய்வுகளும் வரலாறுகளும் நிரூபித்துள்ளது.

பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
இந்த நிலையில், தற்போது மற்றொரு மிக முக்கியமான நேரடி ஆதாரம் ஒன்று இந்த கூற்றை நிரூபணம் செய்வதாக அமைந்துள்ளது. அதாவது, எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது. ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாக அமைந்துள்ளது.
6 கல்லறைகளில் கல்வெட்டுக்கள்
இந்த கல்வெட்டுகள் 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன. இந்த ஆய்வை பாரிஸில் உள்ள French School of Asian Studies (EFEO) நிறுவனத்தின் பேராசிரியர் சார்லட் ஷ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் University of Lausanne பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராக் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
தீபன் நெக்ரோபொலிஸில் உள்ள ஆறு கல்லறைகளில் இந்த கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளனர். 1926ஆம் ஆண்டு கிங்ஸ் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் ஆய்வு செய்து, 2,000-க்கும் மேற்பட்ட கிரேக்க எழுத்துக் குறிச்சொற்களை வெளியிட்ட பிரெஞ்சு அறிஞர் ஜூல்ஸ் பைலேட் மேற்கொண்ட ஆய்வின் பாதையைப் பின்பற்றி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்
இது தொடர்பாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது. எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது,
உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது. ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி.
தொல்லியல் துறை ஆலோசகர் கருத்து
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதோடு "உலகம் தழுவிய தமிழ்" என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது" என்று கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகரான கே. ராஜன் கூறுகையில்,
"தற்போது வெளி வந்துள்ள கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை. மலபார் கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த பண்டைய தமிழகம் மற்றும் ரோமப் பேரரசு இடையேயான வர்த்தக தொடர்புகளை இவை வெளிச்சமிட்டு காட்டியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications