லோக்சபா தேர்தலோடு.. தமிழகத்தின் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? வெளியாகப்போகும் அறிவிப்பு
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த தொகுதிகள் என்ன? எதற்காக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி லோக்சபா தேர்தலில் நிலவ உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முதல் தொகுதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக விஜயதாரணி இருந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2 தொகுதி என்பது திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் எம்எல்ஏவாக திமுகவின் பொன்முடி இருந்தார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். இதனை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் இன்று திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ, நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆகியோர் ராஜினாமா செய்தாலோ அல்லது அவர்களின் பதவி பறிக்கப்பட்டாலோ அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் விளவங்கோடு, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அந்த வகையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications