தமிழகம் முழுவதம் 5,64,253 தபால் வாக்குகள் பதிவு....8 மணிக்கு எண்ணப்படும் - சத்யபிரதா சாகு
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என்றும் ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் எத்தனை தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற தகவல் வெளியாகியள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகளை தவிர மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்குகள் பதிவு செய்திருப்பதன் காரணமாக கூடுதல் வாக்குகள் பதிவானதாக சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு எண்ணப்படும் என்றார்.
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது 35,836 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 10 பொது பார்வையாளர்கள், 6 தேர்தல் அலுவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பதில் மாற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்.
என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications