நேற்று போல் இன்றும் கோட் சூட்டில் சட்டசபைக்கு வந்த முதல்வர் விஜய்! இனி இதுதான் காஸ்ட்யூமா?
சென்னை: தவெக ஆட்சி அமைத்த பிறகு, தமிழக சட்டசபை இன்று முதல்முறையாக கூடுகிறது. இந்த நிகழ்வுக்கு முதல்வர் விஜய், நேற்று போல் கோட் சூட்டிலேயே வந்தார். இன்று 233 தொகுதிகளின் எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிகழ்விற்கு நேற்று காலை 8 மணிக்கு நீலாங்கரை வீட்டிலிருந்து நேரு ஸ்டேடியத்திற்கு புறப்பட்ட விஜய், வெள்ளை நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தார்.

நேரு ஸ்டேடியத்திற்கு வந்த அவரை தலைமைச் செயலாளர் சாய்குமார், தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோடு உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து அவர் பதவியேற்பு நடைபெறும் மேடைக்கு சென்ற போது கருப்பு நிற கோட்டில் சென்றார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அரசியல், முதல்வர் என்றாலே வேட்டி, சர்ட் என்ற பாரம்பரியத்தை, பழக்கத்தை உடைத்து மேலாதிக்க உடைக்கு விஜய் மாறினார். இதை பலரும் வரவேற்றனர். இத்தனை ஆண்டு கால அரசியலில் உதயநிதி, டிஆர்பி ராஜா, எழிலன் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் பேண்ட் அணிந்து கொண்டும் சட்டையில் கட்சியின் சின்னத்தை பொறித்தபடியும் பயணித்து வந்தனர்.
தற்போது தவெகவினர் பலரும் பேன்ட் அணிந்து கொண்டுள்ளனர். சட்டையில் விஜய்யின் புகைப்படம் கொடியுடன் வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று சட்டசபை கூடுகிறது. அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதையொட்டி சட்டசபைக்கு ஒவ்வொரு எம்எல்ஏக்களாக வருகை தருகிறார்கள். இடைக்கால சபாநாயகர் சுப்பையா வந்துவிட்டார். விஜய்யும் கோட் சூட்டில் வந்துவிட்டார். இதையடுத்து சட்டசபை தொடங்கியது.












Click it and Unblock the Notifications