மத்திய அரசுக்கு எதிராக பன்னீர் செல்வம் சொன்ன அந்த வார்த்தை.. அவை குறிப்பிலிருந்தே நீக்கப்பட்டது
சென்னை: மத்திய அரசு தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்வதற்கு எதிராக தமிழக அரசின் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தால் மத்திய நீர்வள ஆணையத்தை கண்டித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதனை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அப்போது மத்திய அரசுகள் குறித்து அறிஞர் அண்ணா கூறியதாக சுட்டிக்காட்டி ஒரு வார்த்தையை பன்னீர்செல்வம் தெரிவித்தார். அப்போது திமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, அவரும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.
இதனால் அவையில் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. ஆனால், சபாநாயகர் தனபால் மத்திய அரசு தொடர்பாக பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
அண்ணா கூறியதைத்தான் தான் கூறினேன் என்று பன்னீர்செல்வம் கூறிய போதிலும் கூட அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
மத்திய அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் ஒரு கருத்தை கூறியதும் அதை அவை குறிப்பில் இருந்து எடுக்க கூடிய அளவுக்கு கடுமையானதாக இருந்ததும் அரசியல் பரபரப்புக்கு காரணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications