கொங்கு மண்டலத்திற்கு சூப்பர் அறிவிப்பு.. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6683 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், கொங்கு மண்டலத்தை குறிவைத்து சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.6683 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு வாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
முழு பட்ஜெட்டை சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் அரசே தாக்கல் செய்ய முடியும் என்ற நிலையில், அந்த பட்ஜெட் ஜுன் அல்லது ஜூலையில் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்னதாக இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தான் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் உரையில்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து தள்ளிய ஓ.பன்னீர் செல்வம்
கவர்ச்சி அறிவிப்பு
பொதுவாக பட்ஜெட்டில் ஏதேனும் சிறப்பு அறிவிப்புகள் இருக்கும். அதுவும் தேர்தல் நெருங்கும் வேளை என்றால் கவர்ச்சி அறிவிப்புகள் இருக்கும். அப்படி ஒரு அறிவிப்பை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கொங்கு மண்டலத்திற்கு வெளியிட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு
கோவை மாநகரம் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறிவிட்ட சூழலில் அதற்கு தகுந்தாற் போல் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஸ்மார்ட்டி சிட்டி திட்டம் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் போக்குவரத்து கோவையில் தொடங்கப்படும் என்று ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
6683 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அந்த நிரூபிக்கும் விதமாக இடைக்கால பட்ஜெட்டில் கோவை மெட்ரோ ரயில போக்குவரத்து திட்டத்திற்கு 6683 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். கோவையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் விடுவதற்கான ஆய்வுகள் நடந்துவிட்ட நிலையில், இந்த அறிவிப்பு கோவை மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருமத்தம்பட்டி
கோவையில் இருந்து திருப்பூர் வரையிலும், கோவையில் இருந்து பல்லடம் வரையிலும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும் மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுடன் நகரம் விரைவடைந்துள்ளது. குறிப்பாக கோவை அவிநாசி சாலையில் 27 கிலோமீட்டர் தூரமுள்ள கருமத்தம்பட்டி வரையிலுமே கோவை மாநகரம் தற்போது பறந்து விரிவடைந்துள்ளது.
எப்படி இருக்கும்
இதேபோல் கோவை மாநகரம் சூலூர் வரையிலும் எப்போதே விரிவடைந்துவிட்டது. மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை வரையிலும் பறந்துள்ளது. இதேபோல் பொள்ளாச்சி ரோட்டிலும், சத்தி ரோட்டிலும், பாலக்காடு ரோட்டிலும் பெரிய அளவில் நகரம் வளர்ந்துள்ளது. எனவே கோவையில் மெட்ரோ ரயில் எப்படி வரப்போகிறது என்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.