Tamilnadu Lockdown எப்படியிருக்கும்?.. "இங்கெல்லாம்" பேருந்து சேவை நிறுத்தப்படுகிறதா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பொது போக்குவரத்து குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தினம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த முதல் அலை, இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 1-ஆம் தேதி முதல் ஆயிரத்து சொச்சத்தில் இருந்த கொரோனா கேஸ்கள், நேற்று 12 ஆயிரத்தை தாண்டியது.
தலைநகர் சென்னை தொடர்ந்து கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தமிழகத்தில் பதிவாகும் கொரோனா ஒரு நாள் கேஸ்களில் பாதிக்கு பாதி சென்னையிலிருந்து பதிவாகிறது.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
இந்த நிலையில் சென்னையில் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த 2 ஆவது அலையின் போது மே 1 ஆம் தேதி மருத்துவமனைகள் 66 சதவீத்ம நிரம்பி வழிந்தன. அன்றைய தினம் ஒரு நாள் கேஸ்களின் எண்ணிக்கை 5,829 ஆக இருந்தது. ஆனால் மூன்றாவது அலையான கடந்த ஜனவரி 9ஆம் தேதி மருத்துவமனைகள் 18.3 சதவீதம் நிரம்பிவிட்டன. நேற்று மட்டும் சென்னையில் 6,186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா தரவு ஆய்வாளர்
கடந்த மே மாதம் மருத்துவமனைகளில் 7,394 பேர் சென்னை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது போல் நேற்றைய தினம் 2,509 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தனியார் கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆலோசனை கூட்டம்
மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பும் சூழல் ஏற்படக் கூடாது என்றால் கொரோனா கேஸ்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

முழு ஊரடங்கா
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் துணிக் கடைகள், அழகு சாதன கடைகள், பேன்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவர். இதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது. கொரோனா தடுப்பூசி முகாமை வார நாட்களுக்கு மாற்றிவிட்டு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

நீண்ட தூர பேருந்து பயணம் நிறுத்தமா
அது போல் நீண்ட தூரங்கள் பயணம் செய்ய பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காக தமிழகம் முழுக்க அல்ல, எங்கெல்லாம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதோ அங்கெல்லாம் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஊரடங்கு எப்படியிருக்கும் என்பதற்கு மத்திய அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒரு முக்கிய க்ளூவை கொடுத்துள்ளார். அதன்படி ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் மத்தியில் திணித்து பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். எனவே தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு பதிலாக எந்தெந்த மாவட்டங்களில் அதிக கேஸ்கள் இருக்கின்றனவோ அந்தந்த மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பிருக்கிறது.












Click it and Unblock the Notifications