மக்கள் ஒத்துழைப்பு இல்லை.. அதிகாரிகள் மீட்டிங்கில் எடப்பாடியார் செம அப்செட்.. ஊரடங்கு நீட்டிப்பு?
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாகவும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
மொத்தம் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள், கொரோனோ தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டு உள்ளன. அந்த குழுக்களுடன்தான் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கு நீட்டிப்பு
நேற்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட வேண்டுமா, அப்படி செய்தால், எங்கெல்லாம் தளர்வு கொடுக்கலாம் என்பது பற்றி முதல்வர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீஸ் பணிச்சுமை
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இருப்பினும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி ஒரு மாதம் ஆகி விட்டது. எனவே அவர்களுக்கு பணி சுமை என்பது மிக அதிகமாக இருக்கும். ஒரே நபர்களை இந்த பணியில் ஈடுபடாமல் சுழற்சி முறையில் நீங்கள் ஈடுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வயது மூத்த போலீசார்
50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களை இரவு ஷிப்டில் பயன்படுத்துங்கள். பகலில் வெப்பம் அதிகமாக இருப்பதால், இப்படிச் செய்யலாம். நோய் எந்த மாதிரி தீவிரமாக இருக்கிறது என்பதை மக்கள் அறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

விழிப்புணர்வு
அதிகாரிகள் குழுக்கள், வீதிவீதியாக ஒலிபெருக்கிகள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. முதலில் அங்கும் மக்கள் ஆபத்தை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டனர். ஆனால் தற்போது அரசு கூறும் வழிமுறைகளை கேட்டபிறகு, இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

பாதிப்பு அதிகரிப்பு
ஆனால் நம்முடைய பகுதியில் மக்கள் அரசின் உத்தரவுகளை பின்பற்றாததால், பாதிப்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது என்பதை மக்களுக்கு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள். காய்கறி சந்தைகளில் தனி மனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது, மக்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என முதல்வர் கூறுவதை பார்த்தால், லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.

நாளை கலெக்டர்களுடன் ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, மற்றும் நோய்த்தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்படும். கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதும், ஊரடங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படுவதும் முக்கிய விஷயங்களாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவுகளை, மீட்டிங் முடிந்த பிறகு முதல்வர் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications