நிறைய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்குது.. நல்ல வருமானம்.. முதல்வரை பாராட்டிய முதியவர்
சென்னை: எல்லோரும் சொல்றாங்க நீங்க கோவிலுக்கு எதுவும் பண்றதில்லைன்னு.. ஆனா உங்க அட்வைஸ்ல அமைச்சர் சேகர்பாபு கோவிலுக்கு நல்லா செய்யறார். கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது என்று முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார் முதியவர் ஒருவர். காலையில் நடைபயிற்சி செய்த போது முதல்வரை சந்தித்த முதியவர் இதனை கூறியுள்ளார்.
கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நமது பாரம்பரியத்தை எடுத்து சொல்வதற்கான வாய்ப்பு இல்லை. சில சமயம் அதில் அரசியல் நுழைந்து, சர்ச்சைகள் உருவாகிறது. கோயில் சொத்துக்களை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர்.

கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை. நமது கோயில் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. வெளிநாடு அருங்காட்சியகத்தில் இருக்கும் கோயில் சொத்துக்களை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம் என்று கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார் நிர்மலா சீதாராமன்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட குற்றசாட்டை கூறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு விஷயத்தை ஆராயாமல் வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ என்று பேசக்கூடாது என்றார்.
இறை சொத்தை களவாடக் கூடிய ஆட்சி இது இல்லை. பாதுகாக்க கூடிய ஆட்சியாகத்தான் உள்ளது. இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பிம்பத்தை உருவாக்க நினைத்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்து சமயத்தை தனது இரு கரங்களால் முதலமைச்சர் அரவணைத்து செல்கிறார். இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வராது என்ற காரணத்தால் இது போல் குற்றசாட்டை வைக்கின்றனர் என்றும் சேகர்பாபு கூறினார். கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அடையாறு பார்க்கில் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்யும் போது பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நேற்று வாக்கிங் சென்ற போது முதியவர் ஒருவர் முதல்வர் ஸ்டாலினிடம் பேசினார். அப்போது அவர் திமுக ஆட்சி காலத்தில் கோவில்களுக்கு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறுவதாக கூறினார். நீங்க கோவிலுக்கு எதுவும் செய்யறதில்லைன்னு நிறைய பேர் சொல்றாங்க ஆனா உங்க அட்வைஸ்படி சேகர்பாபு நிறைய நல்ல காரியங்கள் செய்வதாக கூறினார்.
அதைக் கேட்டு புன்னகைத்த முதல்வர் ஸ்டாலின், குற்றம் சொல்பவர்களுக்கு சேகர்பாபு பதில் கொடுத்திருப்பதாக கூறினார். அப்போது அமைச்சர் மா.சுப்ரமணியன், 1000 கோவில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக குறிப்பிட்டார். அதற்கு அந்த பெரியவர், கடந்த 10 ஆண்டுகளில் எந்த கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இப்போது நிறைய கோவில்களில் கும்பாபிஷேகம் நடப்பதாக தெரிவித்தார். அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே விடை பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications