குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் பலி? முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
சென்னை: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
குவைத் நாட்டில் 6 மாடிக் கட்டிடம் ஒன்றில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தில் 150-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து 6 மாடி கட்டிடம் முழுமையாக பரவியது. இதனால் கட்டிடத்தில் அயர்ந்து உறங்கிய தொழிலாளர்கள் வெளியே தப்பி ஓட முடியாத நிலைமை ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 43 பேர் இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது வரை கேரளாவைச் சேர்ந்த 12 பேர் பலியானதாக அடையாளம் காணப்பட்டது.
அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் இந்த தீ விபத்தில் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு உயிரிழ்ந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கடலூர் சின்னதுரை,பேராவூரணி புனாப் ரிச்சர்ட்,செஞ்சி முகமது ஷெரீப் ஆகியோரும் தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தில் தங்கி இருந்ததாகவும் இவர்களது நிலைமை என்ன என தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலைமை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி அறிக்கையில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications