முதல் கேபினட் கூட்டத்திலேயே ஸ்டாலின் அதிரடி.. அமைச்சர்களுக்கு "7 டாஸ்க்" காவல்துறை விஷயத்தில் கறார்
சென்னை: 10 வருடங்களுக்கு முந்தைய திமுக அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் மறுபடியும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பது தெளிவாக தெரிகிறது.
ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு இது தொடர்பாக திட்டவட்டமாக ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்தம் 7 விஷயங்களை அமைச்சர்களுக்கு அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர், கூறிய ஒவ்வொரு அறிவுரையும் பொதுமக்களிடம் நற்பெயரை ஈட்டுவதற்கான முயற்சிகளாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன சொன்னார் ஸ்டாலின் . இதோ பாருங்கள்.
கொரோனா விவகாரத்தில் மதத்தை பரப்பிய பெங்களூர் பாஜக எம்பி நிருபர்களிடம் பட்டபாடு!
அமைச்சர்கள் மீது நடவடிக்கை
அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக்கூடாது. ஒருவேளை தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்க நான் தயங்க மாட்டேன் என்பது அவரது திட்டவட்டமான முதல் அறிவுறுத்தலாக இருந்தது. கருணாநிதியே இவ்வாறு நேரடியாக குட்டி சொன்னது கிடையாது என்பதால் சில சீனியர் அமைச்சர்கள் ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.
உதவியாளர்கள்
பெரும்பாலும் அமைச்சர்களுக்கு கெட்டபெயர் ஏற்படுவது அவர்களின் தனிப்பட்ட உதவியாளர்களால்தான். அவர்களை பிடித்தால் வேலை முடிந்துவிடும் என்று நினைக்கும் சிலர் உதவியாளர்களை கொண்டு காரியம் சாதிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் நியமனத்தில் தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு திட்டவட்டமாக கூறியுள்ளார் ஸ்டாலின்.
அமைச்சர்கள் தலையீடு
அடுத்தது முக்கியமான ஒரு அறிவுரை. காவல்துறை செயல்பாட்டில் எந்த காரணத்தைக் கொண்டும் அமைச்சர்கள் நேரடியாகத் தலையிடக்கூடாது என்பது ஸ்டாலின் உத்தரவாம். தொகுதியிலுள்ள பிரச்சினைகள், கட்சி பிரச்சினை என எதற்காகவும் காவல்துறைக்கு அமைச்சர்கள் போன் போடக்கூடாது என்று கூறியுள்ளார் ஸ்டாலின். கடந்த முறை திமுக ஆட்சி காலத்தின் போது காவல் துறையில் மாவட்ட செயலாளர்கள் முதற்கொண்டு பல்வேறு நிர்வாகிகளின் தலையீடு இருந்ததாக அதிமுக தரப்பு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து. இந்த முறை அது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார் என்பதை இந்த அட்வைஸ் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.
முதல்வரிடம் சொல்லுங்கள்
அதே நேரம் காவல்துறையினரின் நடவடிக்கைகளில் ஏதாவது அதிருப்தி இருந்தாலோ அல்லது குறைகள் இருந்தாலோ, அந்தத் துறை முதல்வர் வசம் இருப்பதால் அது குறித்து என்னுடைய கவனத்திற்குதான் நீங்கள் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர்களுக்கு ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
துறை சார்ந்த தகவல்கள்
அமைச்சர் பதவி கிடைக்காமல் எத்தனையோ எம்எல்ஏக்கள் காத்திருக்கிறார்கள். உங்கள் 33 பேருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே மெத்தனமாக இருக்க கூடாது. உங்களது துறை சார்ந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
டிரான்ஸ்பர் விவகாரங்கள்
உங்களது துறை சார்ந்த நியமனங்கள், பணி மாறுதல்கள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். நம்மீது, பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக யாரும் குற்றம் சொல்லி விடக்கூடாது. அந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும் என்று மற்றொரு அட்வைஸ் தரப்பட்டுள்ளது.
நல்லது செய்யுங்கள்
10 ஆண்டுகளாக, திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மறுபடி மக்கள் நமக்கு வாய்ப்பு தந்துள்ளார்கள். எனவே, அவர்களிடம் நல்ல பெயரை ஈட்டுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும். எந்த சர்ச்சைகளுக்கும் இடம் தரக்கூடாது. இவ்வாறு ஸ்டாலின் திட்டவட்டமாக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.