டெல்டா விவசாயிகளுக்கு.. ரூ. 78 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நீர் இல்லாததால் இந்த முறை திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் டெல்டா குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகத் திறந்துவிடப்படும். ஆனால், பருவமழை போதியளவில்லை பெய்யாத நிலையில், இந்தாண்டு நீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தைத் தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: இது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண் உற்பத்தியைப் பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திடப் பல முன்னோக்கு திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், உணவு உற்பத்தியைப் பெருக்கவும், உழவர் பெருமக்களின் வருமானத்தை அதிகமாக ஈட்டவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொலைநோக்குத் திட்டங்களை இவ்வரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.
பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜூன் 12ஆம் நாள் திறந்து விடப்படுவது மரபு. எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்த ஆண்டு 2024 மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், டெல்டா சாகுபடிக்கு நீரைத் திறந்து விடக் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது மிகுந்த மனவேதனையைத் தந்தாலும் வேளாண்மை மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளைக் காக்கும் விதமாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதிக் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
உதவி தொகுப்பு: 1,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும். நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்குத் தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.
நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 இலட்சம் வழங்கப்படும். அதோடு. துத்தநாக சத்துக் குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தைப் பயன்படுத்துவதற்கு, ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்
நிதி: பயறு வகைப் பயிர்களை 10,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும். ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியும், பயறுவகைப் பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூபாய் 20 இலட்சம் நிதியும் வழங்கப்படும்.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை. களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி. இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்கிட மானியமாக ரூ.7 கோடியே 52 இலட்சம் நிதி வழங்கப்படும்.
குறுவை சிறப்புத் தொகுப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 24 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கிடவும் உத்தரவிடப்படுகிறது. மேற்கண்டவாறு அரசு நிதியிலிருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தினை இவ்வரசு செயல்படுத்தும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications