கலாட்டா இருந்தால் தானே காங்கிரஸ்! டெல்லிக்கே போனாலும் ஒன்னும் பண்ண முடியலை! குஷியில் செல்வ பெருந்தகை
சென்னை: மீண்டும் உச்சத்தில் இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதல். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்ற வேண்டுமென டெல்லிக்கு சில மாவட்ட தலைவர்கள் படையெடுத்தனர். இந்நிலையில் அவர்களில் சிலர் செல்வப் பெருந்தகை பக்கமே மீண்டும் சாய்ந்திருக்கின்றனர். டெல்லியில் செல்வாக்கு இருப்பதால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் மாவட்ட தலைவர்கள் அமைதி காக்கின்றனர். இதற்கு இடையே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலிலும் செல்வப் பெருந்தகை மாஸ் காட்டி வருகிறாராம்..
சேர்ந்தே இருப்பது காங்கிரசும் கைகலப்பும் என்பார்கள். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எத்தனை தலைவர்கள் வந்தாலும் கோஷ்டி பூசல் மட்டும் முடிவடைந்ததே கிடையாது.

திருநாவுக்கரசர் தொடங்கி தற்போது செல்வப் பெருந்தகை வரை பல தலைவர்கள் மாறிவிட்டாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒரு ஆதரவாளர் வட்டத்தை பெருக்கிக் கொண்டு கட்சிக்குள்ளேயே அரசியல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, கேஎஸ் அழகிரி, ப.சிதம்பரம் என காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கோஷ்டிகள் ஏராளம். தற்போதைய சூழலில் பரபரப்பாக இருப்பது மாணிக்கம் தாகூர் - செல்வப் பெருந்தகை இடையேயான மோதல் தான். பல கட்சிகள் கடந்து வந்தாலும் எம்எல்ஏ ஆகி அதற்குப் பிறகு தலைவரானவர் செல்வப் பெருந்தகை. அவரது தலைமையிலும் காங்கிரஸில் கோஷ்டி பூசல்கள் அதிகமாகத்தான் இருக்கிறது.
கேஎஸ் அழகிரிக்கு பிறகு தங்களுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த விஜயதாரணி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். தற்போது அவர் என்ன ஆனார் என்பதை தெரியவில்லை. மேலும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரமும் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வந்தார். வழக்கமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவர் வந்துவிட்டால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு எதிராக கோஷ்டி மோதல் எழுவதும், அவர்கள் டெல்லிக்கு பரப்பதும் வழக்கம் தான்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி பல்வேறு மாவட்ட தலைவர்கள் நேரடியாக டெல்லிக்குச் சென்று பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் செல்வ பெருந்தகைக்கு எதிராக புகார் அளித்தனர். ராகுல் காந்தியை மட்டும் சந்திக்க முடியவில்லை. ஆனால் புகார் அனுப்பியும் நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
இதற்கு இடையே செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தற்போதைய மாவட்ட தலைவர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டினர். எங்கே கட்சியில் தங்கள் பதவி போய்விடுமோ என புகார் அளித்தவர்கள் மீண்டும் பலர் செல்வப் பெருந்தகை பக்கமே திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற இருக்கிறது.
நாளையுடன் தேர்தல் நிறைவடைய இருக்கும் நிலையில் ஆன்லைன் முறையில் மாநில செயலாளர், பொதுச் செயலாளர், மாவட்ட தலைவர், பொதுச் செயலாளர், சட்டமன்ற தொகுதி தலைவர்கள், மண்டல தலைவர் பதவிக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தற்போதைய மாவட்ட தலைவர்களின் ஆதரவாளர்கள், முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்கள் என பல அணிகளாக தற்போது தேர்தலை சந்தித்துள்ளனர்.
ஆனால் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களை வெற்றி பெற வைக்க மறைமுகமாக முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் முன்னாள் மாவட்ட தலைவர்கள். ஆனாலும் செல்வப் பெருந்தகை தனக்கு இருக்கும் டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி தனது ஆதரவாளர்களையே இளைஞர் காங்கிரஸ் தலைவர்களாகவும் பிற பதவிகளுக்கும் கொண்டு வர தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். இதனால் மேலும் அதிருப்தியில் இருக்கின்றனர் சில நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications