தோற்பதற்காகவே போட்டியிடும் கட்சி நாம் தமிழர் கட்சி.. அது எப்படி 3-வது பெரிய கட்சி ? -தமிழக காங்கிரஸ்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என அக்கட்சியின் மாநில தலைமை உரிமை கோரியுள்ளது.
மேலும், தோற்பதற்காகவே போட்டியிடும் கட்சி நாம் தமிழர் கட்சி என்றும் 234 இடங்களில் போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகளை பெற்ற கட்சி பெரிய கட்சியா அல்லது 25 இடங்களில் மட்டும் போட்டியிட்டு 20 லட்சம் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் பெரிய கட்சியா என வினவியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அடுத்தடுத்து குறி.. பறக்கும் "கேஸ்கள்".. ஆட்சிக்கு வந்ததும் சிங்கப்பாதையில் திமுக.. என்ன நடக்கிறது?
நாம் தமிழர் கட்சி
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி யார் என்று ஊடகங்களின் மூலமாகப் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. உண்மையான கள நிலவரத்தை மூடிமறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தான் மூன்றாவது பெரிய கட்சி என்று ஒருசில ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.
234 தொகுதிகளில்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 20 லட்சம் ஆகும். இதன்படி ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெற்ற சராசரி வாக்குகள் 80 ஆயிரம். அதேபோல, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து 30 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன்படி மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் பெற்ற சராசரி வாக்குகள் 13 ஆயிரம் மட்டுமே.
மறுக்க முடியாது
எனவே, 25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் 72 சதவிகித வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா ? ஆனால், ஒரு தொகுதியில் சராசரியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கிய நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா ? எது பெரிய கட்சி ? இதனடிப்படையில் தமிழக அரசியலில் தொகுதிகளில் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு தேர்தலிலும்
ஒரு கட்சியின் பலத்தைக் கணக்கிடும் போது, 234 இடங்களில் பெற்ற வாக்குகளை வைத்துக் கொண்டு 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பலத்தைக் கணக்கிடுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மூன்றாவது அணி என்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலிலும் இதுவரை ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஓர் அரசியல் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தோற்பதற்காகவே போட்டியிடுகிறது என்று சொன்னால், அது நாம் தமிழர் கட்சியாகத் தான் இருக்க முடியும்.
தேசவிரோத கொள்கை
தேர்தலில் வெற்றி பெறுகிற நோக்கம் இல்லாமல் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போட்டியிடுவதற்காகவே தவறான தேசவிரோத கொள்கையின் அடிப்படையில் இளைஞர்களை ஈர்ப்பதற்குச் சீமான் மேற்கொள்கிற அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகவே அமையும். தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொண்டு தெளிவு பெறுவார்கள்.
காங்கிரஸ் கட்சி
எனவே, நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், மக்கள் நீதி மய்யமாக இருந்தாலும் ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால், தாங்கள் செல்கிற அரசியல் பாதை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டுமே தவிர, புதிய வியாக்கியானங்களை வழங்கி தங்களை மூன்றாவது பெரிய கட்சி என்று அழைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.