தமிழகத்தில்...கொரோனா பரிசோதனை முடிவு...எஸ்எம்எஸ்ஸில் அறியலாம்!!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ளும் சேவையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக 2 பேட்டரி கார்களை இன்று அமைச்சர் விஜய பாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எம்பி வசந்தகுமார் மற்றும் பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளையும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடருக்கு முன்பு எம்எல்ஏ, எம்பிக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வந்தபோதும் கட்டுக்குள் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா உயிரிழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை இனி எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்'' என்றார்.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் பேட்டி அளித்து இருந்த விஜய பாஸ்கர், ''தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழக்கும் 80 பேரில் வெறும் 8 பேர்தான் முற்றிலும் கொரோனாவுக்கு உயிரிழக்கின்றனர். மற்றவர்கள் மற்ற இணை நோய்களால் உயிரிழக்கின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார்.

அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தனது ட்விட்டர் பதிவில், ''ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுநீரக நோயாளிகளுக்கு 350 டயாலசிஸ் செய்து சிறுநீரக தலைமை மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்'' என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் கோயமுத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கோவை மெடிக்கல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 25 பேர் உயிரிழந்து இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். மிகவும் மோசமான கட்டத்தில் இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் உயிரிழந்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications