ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 12 மரணங்களில் 11 சென்னையில் நிகழ்ந்தவை ஆகும். உயிரிழந்த 12 பேரில் 2 பேரை தவிர அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் நேற்று பலியான 12 பேருடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 827 பேர் பாதிக்கப்பட்டனர்.. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நேற்று 20 மாவட்டங்களில் தொற்று பாதித்து இருந்தது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் 9-வது இடம்
சென்னையில் அதிகம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு மரணம் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்திருந்தது. மற்ற 11 மரணங்களும் சென்னையில் ஏற்பட்டவை ஆகும். சென்னையில் இதுவரை 106 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர். தேனி, விழுப்புரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, மதுரையில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 9 மாவட்டங்களில் தலா ஒருவர கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் அதிகம்
கொரோனா வைரஸ் தொற்றால் அண்மைக் காலமாக உயிரிழப்புகள் 10ஐ தாண்டி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 12 பேர் மரணம் அடைந்தனர். இதில் 11 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் திருண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் உயிரிழப்பு 133 ஆக இருந்தது. இந்த சூழலில் 134வது நபராக 72வயது முதியவர் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், கிட்னி பிரச்சனை இருந்தது. 26ம் தேதி மாலை 6.40 மணி அளவில் வைரல் நிமோனியாவால் உயிரிழந்தார்.
ரத்த அழுத்தம்
135வது நபராக இறந்தவர் 62 வயது முதியவர். சென்னையைச் சேர்ந்த இவருக்க காய்ச்சல் மற்றும் கடுமையாக சுவாசபிரச்னை இருந்தது. 24ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் 27ம் தேதி காலை 5.50 மணிக்கு உயிரிழந்தார். 136வது நபராக உயிரிழந்தவர் 54 வயது ஆண். சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் 27ம் தேதி மாலை 4.10க்கு உயிரிழந்தார். இவருக்கு சுவாச பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் உள்பட உடல் ரீதியாக பிரச்சனை இருந்தது.
வயது முதிர்வு
137வது நபராக உயிரிழந்தவர் சென்னையைச் சேர்ந்த 65வயது பெண் ஆவார். இவருக்கு உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சனை இருந்தது. கடுமையான நுரையீரல் வீக்கம் காரணமாக தனியார் மருத்துவமனையில் மே 27ம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு உயிரிழந்தார். 138வது நபராக இறந்தவர் 78 வயது முதியவர். சென்னையைச் சேர்ந்த இவர் 22ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது மரணத்திற்கு பின்னர் உறுதி செய்யப்பட்டது. பல்வேறு உடல் உபாதையால உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
139வயது நபராக உயிரிழந்தவர் திருண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது ஆண். இவர் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் 26ம் தேதி இரவு 9.40 மணிக்கு உயிரிழந்தார். கடுமையான கொரோனா அறிகுறி, கார்டியோஜெனிக் ஷாக், மாரடைப்பு போன்றவை உயிரிழக்க காரணமாக அமைந்தது. 140வது நபராக உயிரிழந்தவர் 36வயது ஆண். சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 27ம் தேதி உயிரிழந்தார். கார்டியோபுல்மோனரி அரஸ்ட் மற்றும் நுரையீரல் காசாநோய் போன்றவற்றால் இறந்தார்.
அடுத்தடுத்து மரணம்
141வது நபராக உயிரிழந்தவர் 65வயது முதியவர்.. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு சர்க்கரை வியாதி, சுவாச பிரச்சனை இருந்தது. 142வது நபராக இறந்தவர் 60 வயது முதியவர். இவர் 27ம் தேதி உயிரிழந்தார். பல உடல் உபாதைகள் இருந்தது. 143வது நபராக இறந்தவர் 64வயது ஆண். சென்னையச் சேர்ந்த இவருக்கு சுவாச பிரச்சனை , கடுமையான கொரோனா நோய் இருந்தது. 27ம் தேதி 9.25க்கு உயிரிழந்தார். 144வது நபராக இறந்தவர் சென்னையைச் சேர்ந்தவர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியாவால் கடந்த 28ம் தேதி காலை 6.15க்கு உயிரிழந்தார்.