தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா.. மொத்தமாக 7204 பேருக்கு தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 6535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 3330 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோயாளிகளை பரிசோதிக்காமலேயே வீட்டுக்கு அனுப்புவதா? -திருமாவளவன் கண்டனம்
சென்னையில் 509 பேருக்கு
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 509 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 43 பேருக்கும், திருநெல்வேலி மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 10 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிசிஆர் சோனை எவ்வளவு
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 13367 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 243037 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 12962 தனிநபர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 232368 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக அதிகபட்சமான பரிசோதனை நடத்திய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதுவும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
இளம் வயதினர் அதிகம்
தமிழகத்தில் 0 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகள் எண்ணிக்கை 187 ஆகவும், பெண் குழந்தைகள் எண்ணிக்கை 177 ஆகவும் உள்ளது. 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களே கொரோனா தொற்றால் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 4255 பேரும், பெண்கள் 2080 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 60வயதுக்கு மேல் உள்ள 503 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 310 பேரும், 193 பேர் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகம்
தமிழகத்தில் இன்று மாலை நிலவரப்படி கொரோனாவால் 7204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதில் 1959 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 5195 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 3171 பேர் கொரோனாவுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் 368 பேரும், திருவள்ளூரில் 272 பேரும், அரியலூரில் 269 பேரும், விழுப்புரத்தில் 255 பேரும், செங்கல்பட்டில் 206 பேரும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளார்கள். இன்று ஒரே நாளில் 3 பேர் இறந்தனர்.அதில் 2 பேருக்கு கொரோனா இருந்தது. இறந்து போன ஒருவருக்கு மட்டும் தொற்று நெகட்டிவ் என வந்தது.