100 நாளில் ‛ஓபன் சேலஞ்ச்’..தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. மாணவர்களே ரெடியா?
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், வாசித்தல் பயிற்சி மற்றும் அடிப்படை கணக்குகளை 100 நாட்களில் ஓபன் சேலஞ்ச் என பொதுவெளியில் அறிவித்து அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்னிலையில் நிகழ்வாக செயல்படுத்த வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிறிக்கை என்பது 4552 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல், கணிதத்தில் அடிப்படை திறன்களை 100 நாட்களில் மாணவர்களுக்கு கற்பித்து ஓபன் சேலஞ்ச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையில், ‛‛தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணித பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து, ஓபன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவிக்க வேண்டும். இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
தளி சட்டசபை தொகுதி ஆனேகொள்ளு, ஊராட்சிக்குட்பட்ட டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை க.வளர்மதி என்பவர், பேஸ்புக் பக்கத்தி்ல 04.11.2024 அன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு ஒரு அழைப்பு விடுத்து இருந்தார். எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களில் அடைவு பெற்றுள்ளனர். அமைச்சர், எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களும் அழைப்பு விடுக்க வேண்டும் என அமைச்சர் கூறினார். அதனடிப்படையில், தற்போது 4,552 பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி) நவம்பர் 2024-ல் பெறப்பட்டுள்ளது. அதனை ஏற்று, பள்ளிக் கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளர் மேற்கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் கருத்துரு தெரிவிக்கப்பட்டது.
பெயர்ப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள்,பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன்னிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து, ஓப்பன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவித்து இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications