பிரசாந்த் கிஷோர் சொன்ன ஒற்றை வார்த்தை.. அப்படியே ஃபாலோ செய்த விஜய்.. தவெக வெற்றியின் ரகசியம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய்யின் இந்த எழுச்சி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சொன்னதை விஜய் அப்படியே பாஃலோ செய்து வெற்றியை அறுவடை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக வேட்பாளர்கள் 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளவர்கள். திமுக வேட்பாளர்கள் 48 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக வேட்பாளர்கள் தலா 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தான், தவெகவின் வெற்றியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே கணித்து கூறியிருந்தார். பீகாரில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிட்டது. இந்த சமயத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவரிடம் பேட்டி எடுத்தது.
அப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர், ''தமிழகத்தில் தவெக தனித்து களமிறங்க வேண்டும். இது மாற கூடாது. இது நடந்தால் அவர் நல்ல வெற்றி பெறுவார்'' என்றார். அதற்கு அவரிடம் ''வெற்றி என்றால் எந்த மாதிரியான வெற்றி? ஆட்சி அமைப்பதற்கான 118 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர், ''ஆம், இந்த வீடியோவை வைத்து கொள்ளுங்கள். ரிசல்ட் வெளிவரும்போது இந்த வீடியோவை ப்ளே பண்ணுங்கள்'' என்று கூறினார்.
இதன்மூலம் விஜய் தனித்து போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறியிருந்தார். தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்கிய நிலையில் ஆட்சியை பிடிக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications