சிதம்பரத்தை தட்டி தூக்கும் திருமாவளவன்.. இந்த முறை திருமாவிற்கு "கிளீன்" வெற்றி.. தந்தி டிவி கணிப்பு
சென்னை; சிதம்பரம் தனி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு 45% வெற்றி வாய்ப்பு என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக சந்திரஹாசனுக்கு 27 % வெற்றி வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜக வேட்பாளர் கார்த்தியாயினுக்கு 19% வெற்றி வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிதம்பரம் தொகுதி: சிதம்பரம் தொகுதி தமிழ்நாட்டில் மிகவும் கவனிக்கப்படும், அதிக பரபரப்பிற்கு உள்ளாக்கும் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாகும். அதிலும் கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்ட களேபரம் காரணமாக இந்த முறை அந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தொல் திருமாவளவன் மீண்டும் களமிறங்கி உள்ளார். திமுக கூட்டணி சார்பாக இவர் பானை சின்னத்தில் போட்டியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிரந்தர சின்னம் என்பது இல்லை. மாறாக ஒவ்வொரு தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை கேட்டு பெற வேண்டும்.
அந்த வகையில் அதன்படி கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்ட பானை சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின் உயர் நீதிமன்றம் வரை சென்று பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றது.
இங்கே அதிமுக சார்பாக எம் சந்திரஹாசன் போட்டியிடுகிறார், பாஜக சார்பாக கார்தியாயினி போட்டியிடுகிறார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த 2017ல்தான் பாஜகவில் போய் இணைந்தார்.
வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனை படைத்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தியாயனி.
தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர். பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கூட, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க அதிமுகவினர் நடத்திய ஜால்ரா போராட்டங்களிலேயே மிகவும் ஷாக்கான விஷயம் இதுதான். கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர்.
தற்போது பாஜக சார்பாக இவர் இங்கே வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இதனால் இங்கே பாஜக - விசிக இடையே கடும் போட்டி உள்ளது. இங்கே நாம் தமிழர் சார்பாக ஜான்சி ராணி போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications