என்னங்க சொல்றீங்க.. சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்! பரபர பின்னணி
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் பிடிபட்ட நிலையில், தற்போது சுமார் 27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் சிக்கியுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்ட நிலையில், திமுக பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து அங்கிருந்து தூத்துக்குடி, இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதாக தகவல் கிடைத்த நிலையில், இந்த மூன்று பகுதிகளிலும், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், தமிழக போலீசார், கடலோர காவல் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படவிருந்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான், இப்ராஹிம் மற்றும் மன்சூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே போல் கடந்த மாதம், சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் சுமார் 50 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ 130 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்தை மையமாக வைத்து போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதோடு, இளைஞர்களிடையே பழக்கமும் அதிகரித்துள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் தலைநகரான சென்னையில் மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் இருந்து ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சோதனை செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற விஜயகுமார் மணிவண்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் சுமார் 2 முக்கால் கிலோ எடை கொண்ட 27 கோடி மதிப்புள்ள மெத்தப்பட்டமைன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் தொழிலில் இவர்கள் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வரும் நிலையில் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications