ஆபாச நடனம்.. அவமரியாதை..கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை
குறவன், குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிப்பு.
சென்னை: கோவில்களிலும் திருவிழாக்களிலும் குறவன், குறத்தி நடனமாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நரிக்குறவர் நடனம் என்பது கிராமங்களில் இன்றைக்கும் விழாக்களில் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டில் வசதிபடைத்தவர்கள், வியாபாரிகள், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடுகளில் பெரியவர்கள் யாராவது உயிரிழந்து விட்டால் குறவன் குறத்தி நடனம் ஆடுவது வழக்கம். அந்த நடனத்தின் போது உயிரிழந்தவரின் பெருமைகளை சொல்லி பாடலாக பாடுவார்கள்.

சில நேரங்களில் கோவில்களில் ஆடப்படும் குறவன் குறத்தி நடனங்களில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு ஆபாச நடனங்களை ஆடுவது அதிகரித்து வருகிறது. அதே போல இரட்டை அர்த்த வசனங்களுடன் கூட ஆபாச பேச்சுக்களை காமெடி என்ற பெயரில் பேசி முகம் சுளிக்க வைப்பார்கள். எனவே இதுபோன்ற ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறவன், குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறிய வந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications