அரசு பள்ளிகளில் 1,036 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? தமிழக அரசு சொன்ன விளக்கம்!
சென்னை: அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் 1,036 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நீதிமன்ற வழக்குகளின் காரணமாக நிரப்ப இயலாத நிலை உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரசுப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் 1,036 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நீதிமன்ற வழக்குகளின் காரணமாக நிரப்ப இயலாத நிலை உள்ளது. அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஊட்டுப் பதவியாக பட்டதாரி ஆசிரியர் பதவி மட்டும் உள்ளது. இதனால் இந்த பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை சேர்க்கக் கூ டாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசியராக பதவி உயர்வில் சென்ற 1,187 முதுநிலை ஆசிரியர்களை மீண்டும் தரம் இறக்காமல் பணியில் தொடரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப் 4 ஆம் தேதி வரவுள்ளது. மேலும், ஆசிரியர் பணிக்கும், பதவி உயர்வுக்கும் டெட் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு நிலுவையில் உள்ளது. ஆசிரியர்களின் நலன் கருதி தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மட்டும் 2026ம் ஆண்டில் மட்டும் 3 சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். பாமக தலைவர் அன்புமணி வெளியி்ட்டிருந்த பதிவில், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப்பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளிலும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். அதற்கு தகுதியான ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டுள்ளது.
திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்க வில்லை. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாததும் முக்கியக் காரணம்.
தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பல வழிகளில் அரசு பள்ளிகளை சீரழித்த திமுக அரசு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கொண்டாட்டங்களை நடத்துவது கொடூரமானது ஆகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்வித்துறை மிக மோசமான சீரழிவை சந்தித்தது கடந்த ஐந்தாண்டுகளில் தான். இதற்கான தண்டனையை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள்" என்று விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications