‛ஜாக்பாட்’.. ஆசிரியர்களுக்கு கைக்கணினி, வெளிநாடு சுற்றுலாவோடு 4 புதிய திட்டம்! முதல்வர் அதிரடி! ஆஹா
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளான இன்று தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைககளுக்கு 4 முக்கிய திட்டங்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கைக்கணினி வழங்கவும், வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 4 முக்கிய திட்டங்களை பள்ளி கல்வித்துறை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளான இன்று அறிவித்தார். இதன்மூலம் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ‛ஜாக்பாட்' அடித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறையில் புதிதாக 4 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் ஆசிரியர், ஆசிரியைகளின் நலனை காக்கும் வகையில் செயல்பட்டு வர உள்ளது.
அதாவது மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்கள் தொடர்ந்து பாடுபட்டு வரும் நிலையில் ஆசிரியர்களின் சேவையை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு இந்த புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

ஆசிரியர்களுக்கு கைக்கணினி
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்ந்து ஆசிரியர்களுக்காக 4 புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டேப்லெட் (கைக்கணினி) வழங்கப்படும். தங்களுக்கான கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்தும் வகையில் இந்த கைக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2வது திட்டம் என்ன?
இரண்டாவது அறிவிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் உள்ளது. அதாவது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

3வது, 4வது திட்டம் என்ன?
மூன்றாவதாக உயர்லகல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி செலவை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவதாக அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு செல்லும் ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 புதிய திட்டங்களும் ரூ.225 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

போராடி பெற்ற உரிமை
மேலும் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் கல்வி என்பது நாம் போராடிப் பெற்ற உரிமை. உலக அறிவை வளர்க்கவும், பகுத்தறிவோடு சிந்திக்கவும் கல்வி அறிவு மிகவும் முக்கியம். ஒருவர் வாழ்க்கையில் கற்றுக் கொள்கின்ற கல்வி அவரை என்றைக்கும் கைவிடாது. அதனால்தான், கல்வி யாராலும் திருட முடியாத சொத்து என்று சொல்கிறேன். குழந்தைகள் பள்ளிகளை நோக்கி வரவேண்டும். கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் நீதிக்கட்சி காலத்தில் இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலேயும், தரமான கல்வியைக் கொடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது எனக்கூறியதோடு கல்வித்துறைக்காக கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.












Click it and Unblock the Notifications