அதிரடி! ரூ. 2,000 கோடி வெள்ள நிவாரணம்.. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழ்நாட்டுக்கு ரூ. 2,000 கோடி இடைக்கால வெள்ள நிவாரணம் வழங்க மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: சர்வாதிகாரம் தலை தூக்கக் கூடாது. ஜனநாயகம் கேள்விக் குறியாகவும் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். சமவாய்ப்புடன் தேர்தல் நடந்தால் பா.ஜ.க. ஆட்சிக்கு சாவுமணி அடிப்பது உறுதி என்று தெரிந்ததால்தான் எல்லா பக்கத்தில் இருந்தும் இப்படி அநியாயம் மேல் அநியாயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் கோபம் அதிகரிப்பு: காங்கிரஸ் கட்சி இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை ஆணையர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடியும் வரை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க.மேல் மக்கள் கோபம் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்று அவர்களுக்கு புரிந்துவிட்டது. அதனால்தான், அந்தர் பல்டி அடிக்கிறார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்ததும் எவ்வளவு பெரிய தவறு என்று பா.ஜ.க. விரைவில் உணரத்தான் போகிறது.
சர்வாதிகார பாஜக: சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க.விடம் நீதி - நேர்மை - நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை... அதனால்தான், சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம்... மாநிலங்களை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தலாம் என்பதில்தான் பா.ஜ.க.வின் மொத்தச் சிந்தனையும் இருக்கிறது... ஒன்று, மாநிலங்களுக்கான நிதி தராமல் முடக்குவது... இல்லை என்றால், ஆளுநர்களை வைத்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் முடக்குவது... இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாமும் போயாகிவிட்டது. செய்தி 2 நாளில் வரும். பாருங்கள்.
உச்சநீதிமன்றம் போகிறோம்: நேற்றுகூட... கேரள மாநில அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடினார்கள். கர்நாடக அரசு நீதிமன்றம் சென்று வறட்சி நிவாரணம் தரச் சொல்லுமாறு வாதாடுகிறார்கள். நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக் கேட்டுப் பார்த்தோம். தரவில்லை. நாளை காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம். பணம் தராதது மட்டுமல்ல, நமது மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து கொடுத்த பணத்தையும், பிச்சை என்று நக்கலடித்தார் பா.ஜ.க. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.
நியாயத் தீர்ப்பு: மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மக்களோடு மக்களாக - மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மாநில அரசுகள்தான். மாநிலங்கள் நீதி பெறவும் உச்சநீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும்; நிதி பெறவும் உச்சநீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும் என்றால், இதற்கு எதற்கு மோடி பிரதமர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார் என்பதுதான் என்னுடைய கேள்வி. இந்த நிலைமை மாற வேண்டும்! அதற்காகத்தான் மாநில உரிமைகளுக்கான முழக்கத்தையும், கூட்டாட்சிக்கான குரலையும் தொடர்ந்து எழுப்புகிறோம்! அதற்கு நீதிமன்றம் போன்றே மக்கள் மன்றமும் இந்தத் தேர்தலில் நியாயத் தீர்ப்பு எழுத வேண்டும் . இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு: இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு ரூ. 2,000 கோடி வெள்ள நிவாரணம் உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் தரக் கோரி தமிழ்நாடு முதல்வர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோர் மத்திய அரசுக்கு பல முறை கடிதம் அனுப்பினர். ஆனாலும் மத்திய அரசு இதுவரை தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி தரவில்லை. தமிழ்நாட்டுக்கு உடனடியாக ரூ. 2,000 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications