33 வருட சிறைவாசம்.. ஆட்டோ சங்கரின் தம்பியை முன்கூட்டியே விடுதலை செய்த அரசு.. ஹைகோர்டில் தகவல்
சென்னை: 6 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆட்டோ சங்கரின் தம்பி முன்கூட்டியே விடுதலை செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதுதொடர்பான அரசாணையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆட்டோ சங்கரின் தம்பி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி வரை 32 ஆண்டுகள் 9 மாதம் 16 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டு மே மாதம் சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகியோர் காணாமல் போனார்கள். இந்த வழக்கில் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆட்டோ சங்கர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து லலிதா, சுடலை, ரவி உள்ளிட்டோர் கைதாகினார்கள். ஆட்டோ சங்கர் மற்றும் அவரது கூட்டடாளிகள் 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்து, வீட்டுக்குள் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த ஆட்டோ சங்கர், எதிரிகளை கொன்று தனது வீட்டு சுவருக்குள் எலும்புக்கூடுகளை வைத்து பூசியிருந்தார். மொத்த இந்தியாவையும் அதிர வைத்த இந்த வழக்கில் ஆட்டோ சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள், சென்னை சென்ட்ரலில் அப்போது இருந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள், தப்பியோடி விட்டனர்.

தப்பி ஓடியவர்களில் எல்லாரையும் பிடித்த போலீசார், ஆட்டோ மோகன், ஆட்டோ செல்வராஜ் ஆகியோரை சில மாதங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. மற்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் தலைமறைவான 2 பேர் மீதான வழக்கை தனியாக பிரித்து, ஆட்டோ சங்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை மட்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர், ஆட்டோ சங்கருக்கும், அவர் மைத்துனர் எல்டீனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களும் தூக்கிலிடப்பட்டனர்.
இதற்கிடையில், ஆட்டோ சங்கர் வழக்கில் காலதாமதமாக கைது செய்யப்பட்ட ஆட்டோ மோகன், ஆட்டோ செல்வராஜ் மீதான வழக்கை, சென்னை முதலாவது குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அவர்கள் இருவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர்களும் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்தநிலையில், 66 வயதான ஆட்டோ மோகனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி துளசிதேவி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, துளசிதேவி தரப்பில் வக்கீல் எஸ்.மனோகரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ஆட்டோ மோகனுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்டோ மோகனை விடுதலை செய்வதாக அரசு தரப்பில் கூறி, அதுதொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அரசாணையில், அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த (ஆட்டோ) மோகன், 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி வரை 32 ஆண்டுகள் 9 மாதம் 16 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். அதனால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்" என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்றம், இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications