பென்ஷன்தார்களுக்கு குட்நியூஸ்.. முதியோர் ஓய்வூதிய பென்ஷன் ரூ.1200 எப்போது வரும்? தமிழக அரசு அதிரடி
சென்னை: முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான மாத ஓய்வூதியத் தொகையை ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்குவது என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில், எப்போது ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது,
2 நாட்களுக்கு முன்பு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது... இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறைச் செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, பல்வேறு விஷயங்களுடன் சேர்த்து, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் தகவல்: இந்த கூட்டத்துக்கு பிறகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் சொன்னபோது, "தமிழகம் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டம் மூலமாக வழங்கப்படும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட ஓய்வூதியங்கள் ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1962-ல் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மாதம் ரூ.20 வழங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, இப்போது மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் கடந்த ஜனவரி 1-ம்தேதி முதல் 1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம்: ரூ.845.91 கோடி கூடுதல் செலவு: அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார். இவர்களுக்கு உதவும் வகையில், ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல்செலவு ஏற்படும். மேலும், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளோர் 74 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. கைத்தறி, தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள், கட்டிடத் தொழிலாளர் வாரிய உறுப்பினர்களும், உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தால் பயனடைவர் என்று கூறியிருந்தார்.
அரசாணை: இந்நிலையில் முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கான உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போது முதியோருக்கான ஓய்வூதிய தொகை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் ஓய்வூதியதாரர்கள் அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications