ஆளுநர் ஆர்என் ரவி திடீர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு.. என்ன காரணம்?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி திடீரென்று இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த பயணம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இவர் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார்.
இந்த வேளையில் புதிய கல்வி கொள்கை மற்றும் சனாதன தர்மம் ஆகியவை குறித்து ஆளுநர் ஆர்என் ரவி கருத்து தெரிவித்து வருகிறார். இதனை திமுக மற்றும் திமுவின் கூட்டணி கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தேநீர் விருந்து
இதனால் தமிழக அரசு-ஆளுநர் மாளிகை இடையே சுமூகமாக உறவு இல்லை என கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே தான் சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்என் ரவி வழங்கிய தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இது மாநில அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.

டெல்லி சென்ற ஆளுநர் ஆர்என் ரவி
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி இன்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி சென்ற அவர் 4 முதல் 5 நாட்கள் வரை டெல்லியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் சந்திக்க வாய்ப்பு
மேலும் இந்த வேளையில் ஆளுநர் ஆர்என் ரவி மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை ஆளுநர் ஆர்என் ரவி சந்தித்தால் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கிடப்பில் உள்ள மசோதாக்கள் குறித்து இருவரும் விவாதிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

துணைவேந்தர் நியமனம் சர்ச்சை
தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் என்பது வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் கையில் உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வரும் வகையில் துணைவேந்தர்கள் நியமனத்தை மாநில அரசு செய்யும் எனும் வகையில் 2 மசோதாக்களை தமிழக அரசு கடந்த ஏப்ரலில் அனுப்பி வைத்தது. இது நிலுவையில் உள்ள நிலையில் தான் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து மாநில அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், அதில் ‛‛துணைவேந்தர்களை மாநில அரசு நியமிப்பது என்பது பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது'' என கூறப்பட்டு இருந்ததாகவும் நேற்று தகவல் வெளியாகின. ஆனால் அதனை ஆளுநர் மாளிகை தரப்பு மறுத்துள்ளது. இது சர்ச்சையானது.

ஒப்புதலுக்கு காத்திருக்கும் மசோதா
இந்த துணைவேந்தர்கள் நியமனம் உள்பட தமிழக அரசின் வேறுசில மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் பலமுறை ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்தால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications