என்ன நடக்கிறது தமிழகத்தில்? ஆளுநர் கையில் டீடெய்ல் ரிப்போர்ட்! அமித் ஷாவுடன் முக்கிய மீட்டிங்!
சென்னை: ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் போதைப்பொருள் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அதே நேரத்தில் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை அடுத்து சென்னையின் காவல் ஆணையராக இருந்த சந்திப் ராய் ராத்தோர் மாற்றம் செய்யப்பட்டார். இது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கை கவனிக்க டேவிட்சன் தேவசீர்வாதம் ஏடிஜிபி ஆகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய உள்துறைக்கு ஆளுநர் ரவி அனுப்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்திருக்கும் நிலையில் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பாஜகவினரும் அதிமுகவினரும் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தனர். இந்த நிலையில் தான் தமிழக ஆளுநர் ரவி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து விமானத்தில் அவரது மனைவியுடன் டெல்லி சென்றார். வழக்கமாக அவர் விஐபி நுழைவாயில் வழியாகத்தான் செல்லும் நிலையில் பேரனுடன் வந்ததால் இரண்டாவது உள்நாட்டு புறப்பாடு முனையத்தில் இருந்து சென்ற ஆளுநர் தனிப்பட்ட பயணமாகவே டெல்லி சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அவர் மத்திய அமைச்சர் அமித்ஷா ஒழிப்பு வரை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது.
பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோரை ஆளுநர் சந்திக்கவில்லை. இந்த நிலையில் 5 நாள் பயணமாக அவர் டெல்லி சென்றிருக்கும் நிலையில் இருவரையும் சந்திப்பார் என கூறப்பட்டது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை ஆளுநர் ரவி சந்தித்து பேசினார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் நிகழும் கொலைகள், கள்ளச்சாராய மரணம் உள்ளிட்டவை குறித்து ஆளுநர், அமித் ஷாவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள பதிவில்,"மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications