ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.. தச்சங்குறிச்சியில் ஜனவரி 3ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கும். 2026 ஆம் ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தச்சங்குறிச்சியில் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என்று மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 2026 ஆம் ஆண்டு வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டி அந்த கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கி இருந்தனர்.
மேலும், அப்பகுதியில் மேடை அமைத்தல், வாடிவாசல் அமைத்தல், பார்வையாளர் மாடம் அமைத்தல், காளைகளை வரிசைப்படுத்தி நிற்க வைக்கும் அட்டி அமைத்தல், பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மும்முறமாக செய்து அந்த பணிகளை முடித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில்தான் ஜனவரி மூன்றாம் தேதி தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள தச்சங்குறிச்சியில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, காளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications