உச்ச நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம்.. தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்த தமிழக அரசு
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற தலைமை அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது. வரிசை எண் அடிப்படையில் வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் நீதிபதி கூறினார்.
கார்த்திகை தீப சமயத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாகத் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்தக் கார்த்திகை தீபத்தை உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக மலை உச்சியில் அமைந்துள்ள கார்த்திகை மகா தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரம்
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அதில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனாலும், நேற்றைய தினம் இந்தச் சம்பவத்தில் பல திருப்பங்கள் நடந்தது. முதலில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மேல்முறையீட்டை இரு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து மீண்டும் மாலை அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது நீதிமன்றத்தில் பல்வேறு காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அனுமதிக்காத போலீஸ்
கடைசியில் நேற்றைய தினமே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனால் திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டோர் குவிந்தனர். இருப்பினும், போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கிருந்தவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அறிவுறுத்திய பிறகும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில், பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் நள்ளிரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும், தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீடு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்கவும் தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் மனு விசாரணைக்காக பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் உரிய வரிசையில் பட்டியலிடப்படும் எனவும் கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என ராம ரவிக்குமார் என்பவர் தான் வழக்கு போட்டிருந்தார். அவரும் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது தரப்பிலும் போலீசார் உரிய பாதுகாப்பு தரப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications