30 லட்சம் வரை மாணவர்களுக்கு.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எங்கெங்கே விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவர்களுக்கு கல்வி கடன் உதவி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO) கல்வி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்லது.

சிறுபான்மையின மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி / வேலை வாய்ப்பு / பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.
தகுதியான கட்டணங்கள்:
1. சேர்க்கைக் கட்டணம் / பயிற்றுவிப்புக் கட்டணம்.
2. புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்குத் தேவையான உபகரணங்கள்.
3. தேர்வுக் கட்டணம்.
4. விடுதி மற்றும் உணவுக் கட்டணம் (விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மட்டும்)
விண்ணப்பிப்பதற்கான ஆவணங்கள்:
1. மதத்திற்கான சான்று: சாதிச் சான்றிதழ் /பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்.
2. வருமானச் சான்றிதழ் நகல்.
3. இருப்பிடச் சான்றிதழ் நகல்
4. ஆதார் சான்றிதழ் நகல்.
5. உண்மைச் சான்றிதழ் (Bonafide Cerificate) நகல்.
6. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/ செலான் (Original)
7. மதிப்பெண் சான்றிதழ் நகல்
8. வங்கி கோரும் இதர ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் இடம்:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.
அரசின் இந்த கல்விக் கடனை சிறுபான்மை மாணவ, மாணவிகள் பெறுவதற்கு தமிழக அரசின் சார்பில் இரண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் திட்டத்தின்படி, பெற்றோர் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை இருந்தால், தொழிற்கல்வி/ வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் விதம் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் தொழிற்கல்வி வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் படிப்பவர்களுக்கு ஆண்டிற்கு ஆறு லட்சம் வீதம் அதிகபட்சம் 30 லட்சம் வரை ஆண்டிற்கு மூன்று சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
இரண்டாவது திட்டத்தின் கீழ் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் 8 லட்சம் வரைக்கும் மிகாமல் இருந்தால், தொழிற் கல்வி வேலைவாய்ப்பு/ பட்டப் படிப்புகள் ( அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ) ஆண்டுக்கு நான்கு லட்சம் விதம் அதிக பட்சம் 20 லட்சம் வரை வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழிற்கல்வி/வேலைவாய்ப்பு படிப்புகள் படிப்பவர்களுக்கு ( அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ) ஆண்டிற்கு ஆறு லட்சம் வீதம் அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8 சதவீதமும் மாணவிகளுக்கு ஆண்டிற்கு 5 சதவீதமும் வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications